மும்பை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகளின் போதே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். விக்கெட் கீப்பிங் செய்யும் போது, பேட்டிங் செய்யும் போதும் தோனி காயத்தால் அவதியடைந்தது ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக காயத்துடன் மைதானத்தை சுற்றி வந்து ஆச்சரியளித்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். அதே காயத்துடன் குஜராத் அணியையும் வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார் தோனி.
இதன்பின்னர் இறுதிப்போட்டிக்கு பின்னர் சென்னை கேப்டன் தோனி, காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி காலில் ஏற்பட்ட காயத்தின் தன்மையை பரிசோதனை செய்த பிறகே, அறுவை சிகிச்சை தேவையா என்பது தெரிய வரும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை அணியின் கேப்டன் தோனி, இன்று காலை மும்பை வந்தார். அவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்து பகவத் கீதையுடன் மருத்துவமனை சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-க்கு கோகிலாபென் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரிஷப் பண்ட்-க்கு, மருத்துவர் தின்ஷா பர்திவாலா சிகிச்சை அளித்திருந்தார். இந்த சூழலில் தோனிக்கும் அவரே அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் தோனி சிறிது காலம் தோனி ஓய்வில் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் தோனி மீண்டும் பழைய வேகத்துடன் ஓடுவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.