சென்னை: கிட்டத்தட்ட 42 வயதில் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியை போல் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி யாரையும் பார்த்ததில்லை என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி சாதனை படைத்துள்ளது. இந்த இறுதிப்போட்டியுடன் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் ஐபிஎல் கோப்பையை நேரடியாக அம்பாதி ராயுடு மூலமாக கோப்பையை பெற்றுக் கொண்டார் தோனி. ஐபிஎல் வரலாற்றில் கேப்டனே எப்போதும் கோப்பையை பெற்று வரும் சூழலில், ராயுடுவின் கைகளால் தோனி கோப்பையை பெற்றுக் கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அம்பாதி ராயுடு களத்தில் ஆனந்த கண்ணீருடன் அனைவருக்கும் விடை கொடுத்தார். இதுகுறித்து அம்பாதி ராயுடு பேசுகையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் வென்ற பின் அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது என்னிடம் வந்து, கோப்பையை வாங்குவதற்காக மேடைக்கு நானும் ஜடேஜாவும் வர வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அது முழுக்க முழுக்க தோனியின் முடிவுதான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, கிட்டத்தட்ட 42 வயதில் தோனி அளவிற்கு யாரும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை. அவரால் சிறப்பான ஆட்டத்தை இந்த வயதிலும் வெளிப்படுத்த முடிகிறது. சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்த நொடிகள், ஒரு மின்னல் போல் இருந்தது. நான் ஸ்வீப்பர் கவர் திசையில் நின்று பார்த்த போது, ஆச்சரியத்தின் உச்சிக்கு சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். அதேபோல், இந்த சீசனில் குஜராத் அணியின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வந்தோம்.

அதனால் குவாலிஃபையர் முதல் போட்டிக்கு பின் குஜராத் அணியை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திக்க சென்னை அணி விரும்பவில்லை. ஏனென்றால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் குஜராத் அணியினர் சிறப்பாக இருந்தார்கள்.உண்மையை சொல்ல வேண்டுமென்றால், குஜராத் அணி அனைவருக்கும் அச்சத்தை கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.