மும்பை: இந்திய அணியின் கேப்டனாக இருந்து ஐசிசியின் 3 வகையான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி. 2004ல் இந்திய அணியுடன் தொடங்கிய இவரின் கிரிக்கெட் பயணம், இன்று வரை சென்னை அணிக்காக தொடர்ந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், ரசிகர்கள் தோனியை இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.
42ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு, என்னென்ன தொழில்கள் செய்து வருகிறார் என்பது குறித்து பார்க்கலாம். அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் தோனி தனது உச்சக்கட்ட ஃபிட்னஸோடு காணப்பட்டார். வழக்கமாகவே ஃபிட்னஸ்-க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தோனி, நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் ஃபிட் வேர்ல்டு என்ற உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் தோனி தான். அதேபோல் கால்பந்து விளையாட்டின் மீது காதல் கொண்ட தோனி, சென்னையன் எஃப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். அதேபோல் "7" என்ற ஷூ உற்பத்தி தொழிலிலும் தோனி ஏராளமான முதலீடுகளை செய்துள்ளார். அதேபோல் சென்னை அணியின் கேப்டனாக ரூ.12 கோடி ஊதியம் பெறுகிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவரான தோனி, அதன் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சொந்த ஊரான ராஞ்சியில் 7 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள பண்ணை வீடு, மும்பை மற்றும் புனேவில் உள்ள சொந்த வீடு என்று பிரம்மாண்ட வீடுகளையும் தோனி கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் புனே பகுதியின் கடற்கரை அருகே தோனி தற்போது பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருவதாக கூறப்பட்டது. அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்ஷி தோனி புகைப்படத்துடன் உறுதி செய்தார்.
அதேபோல் தோனி எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதன் மூலம் படங்கள் தயாரிப்பு ஒருபுறம் இருந்தாலும், விளம்பரப் படங்களை உருவாக்குவதே முக்கிய நோக்கம். அதேபோல் விவசாயம் மூலம் செய்யப்படும் ஏற்றுமதி பொருட்கள் மூலமாக தோனி அதிக வருமானம் ஈட்டி வருகிறார். இதுமட்டுமல்லாமல் பைக், கார் என்று தோனி அளவிற்கு உச்சபட்ச சொகுசு வாழ்க்கை வாழும் கிரிக்கெட் வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கிட்டத்தட்ட ரூ.1040 கோடிக்கு தோனியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.