மும்பை: ஐபிஎல் தொடருக்கு பின் முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வெளியாகியுள்ள தோனியின் புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் முதல் கட்ட போட்டிகளின் போதே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். விக்கெட் கீப்பிங் செய்யும் போதும், பேட்டிங் செய்யும் போதும் தோனி காயத்தால் அவதியடைந்தது ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

இதன்பின்னர் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், சென்னை கேப்டன் தோனி, முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுக்க ஜூன் 1ஆம் தேதியே நேரடியாக மும்பைக்கு சென்றார். விபத்தில் சிக்கிய இந்திய வீரர் ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்ட கோகிலாபென் மருத்துவமனையிலேயே தோனியும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் போது, கறுப்பு நிற டீ சர்ட் அணிந்து பகவத் கீதையுடன் மருத்துவமனை சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. பிரபல மருத்துவர் தின்ஷா பர்திவாலா தான் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் தோனி சிறிது காலம் ஓய்வில் இருப்பார் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் தோனி மீண்டும் பழைய வேகத்துடன் ஓடுவதற்கு 2 மாதங்கள் வரை ஆகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதி செய்த சிஎஸ்கே நிர்வாகம், காயம் குணமடைய எத்தனை மாதங்களாகும் என்பது பற்றி எந்த தகவலையும் உறுதி செய்யவில்லை.
இதனால் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி பங்கேற்க வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோனியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் தோனி இட்லி, வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். மும்பையில் வட, பாவ் சிறந்த உணவு என்று ஏராளமானோர் சொல்லி வந்த நிலையில், அதே மும்பையில் அமர்ந்து தோனி தமிழர்களை போல் இட்லியும் வடையும் சாப்பிடுவது சென்னை அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.