சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியிடம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் ஆட்டோகிராஃப் பெற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்கள் தோனியை பார்ப்பதற்காகவே ஆர்வமாக குவிந்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு கேப்டன் எம்எஸ் தோனி காலில் காயத்துடன் மைதானம் முழுக்க வலம் வந்து நன்றி தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்த பின்னர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், நேரடியாக மைதானத்திற்குள் சென்று தோனியை பார்த்து தனது சட்டையின் மேல் ஆட்டோகிராஃப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க, உடனடியாக தல தோனி, சுனில் கவாஸ்கரின் சட்டையின் மேல் ஆட்டோகிராஃப் அளித்தார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர், அவருக்கு ஜூனியரான எம்எஸ் தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தோனியின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஜாம்பவான் வீரர்களான முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் உள்ளிட்டோர் தோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்டனர். சீனியர் வீரர்கள் கூட தோனிக்கு ரசிகராக இருப்பது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என்று சாதனைகளை படைத்துள்ள பேட்ஸ்மேன்கள் வரிசையில், ஒரு கேப்டனாக தோனி அனைவரையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.