மும்பை: சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் தோனிக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அதிக முறை கோப்பையை மும்பை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 16 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அணி கேப்டன் தோனிக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 41 வயதான தோனி முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அவதிப்பட்டார்.
இதுகுறித்து ஐபிஎல் சீசன் தொடக்கத்திலேயே பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், கேப்டன் தோனி முழங்கால் காயத்துடன் அவதிப்பட்டு வருவது உண்மைதான். அவரது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த காயத்தினால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலக வாய்ப்பில்லை என்று கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னை அதிகமாக ஓட வைக்க வேண்டாம் என்றும் சிஎஸ்கே வீரர்களிடம் தோனி வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டிக்கு பின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை வீரர்கள் மைதானம் முழுவதும் சுற்றி வந்து பரிசு பொருட்களை வழங்கினர். அதில் கேப்டன் தோனி தனது முழங்கால் பகுதியில் கட்டுபோட்டு நடந்தது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில் எம்எஸ் தோனி இந்த வாரம் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார் என்றும், அவரது முழங்கால் காயத்தின் அளவை சரிபார்க்க சோதனைகள் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்-க்கு கோகிலாபென் மருத்துவனையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த காயத்தின் நிலைமையை பொறுத்தே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்பது தெரியவரும். இதனை சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதனும் உறுதி செய்துள்ளது.