சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட் ஆனார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 17 இன்னிங்ஸ்களில் ருதுராஜ் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.
முக்கியமான நேரத்தில் அவர் ஆட்டமிழந்தது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. 197 ரன்கள் என்ற இலக்கை சேப்பாக்கம் மைதானத்தில் சேஸிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருந்தது.

இதற்கு முன் இதே ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேப்பாக்கம் மைதானத்தில் சேஸிங் செய்து இருந்தது. அதுவே சேப்பாக்கம் மைதானத்தில் சேஸிங் செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் ஆகும். அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
முதல் போட்டியைப் போல துவக்க வீரராக இறங்கிய ராகுல் திரிபாதி 3 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார். அடுத்து களம் இறங்கிய ருதுராஜ், முதல் போட்டியைப் போலவே அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 17 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் அடுத்து என்ன நடக்குமோ என உறைந்து போனார்கள்.
அதன்பின் சிஎஸ்கே அணியின் ரன் குவிப்பு விகிதம் வெகுவாக சரிந்தது. மேலும், அடுத்து வந்த தீபக் சாஹர் 4 ரன்களிலும், சாம் கரன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி 8.5 ஓவர்களில் 52 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்தது. அதன் பின்னர் ரன் ரேட் தேவையை நெருங்க முடியாமல் சிஎஸ்கே அணி சரிந்தது.
செய்தி சுருக்கம்: