சென்னை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த போது டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே கேப்டனாக தோனி 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 4 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இன்று வரை தோனி மீதான வெளிச்சம் கொஞ்சம் கூட குறையவில்லை. சிஎஸ்கே அணியை வழிநடத்தியதும், சொந்த வாழ்க்கையை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டாததும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு தோனிக்கு ஏராளமானோர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தற்போது மும்பையில் உள்ள தோனி அவரது பிறந்தநாளினை நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினார். அவருடன் மனைவி சாக்ஷி கேக் வெட்டி ஊட்டிவிட்ட வீடியோ வெளியிடப்பட்டது. இதன்பின் தோனியின் கால்களில் ஜாலியாக விழுந்து ஆசிர்வதிக்கவும் என்று சாக்ஷி கூறிய வார்த்தைகள், சிஎஸ்கே ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் அல்லாமல் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே உடனிருந்துள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜிம்பாப்வே டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அவர் நள்ளிரவிலேயே வீடியோ கால் மூலமாக தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அந்த வீடியோ காலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவும் இணைந்து வாழ்த்தி இருக்கிறார். அதேபோல் இந்திய அணிக்காக விளையாடி வரும் முகேஷ் குமாரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அவரது சிஷ்யன் ருதுராஜ் கெய்க்வாட் நள்ளிரவிலேயே வாழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ருதுராஜ்-க்கு பலரும் இன்று நடக்கும் 2வது டி20 போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் முதல் டி20 போட்டியில் ருதுராஜ் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து நடக்கவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கழற்றிவிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.