சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கும் தற்போதைய கேப்டன் தோனிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதன் உண்மைத் தன்மை குறித்து தெரியாவிட்டாலும், எதற்காக ருதுராஜ் கெய்க்வாட் மீது சிஎஸ்கே நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது, ஏன் அவரை அணியிலிருந்து நீக்கியது என்பது பற்றி அந்த செய்திகளில் உள்ள விவரங்களை இங்கே பார்க்கலாம்.
ருதுராஜ் கெய்க்வாட் அணியில் தன்னிச்சையாக சில மாற்றங்களை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதில் தோனிக்கு சில மாற்றுக் கருத்துக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் செய்த மாற்றங்களால் எந்த பலனும் ஏற்படவில்லை. சிஎஸ்கே அணியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் அணியில் மாற்றப்பட்டனர். அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இத்தனை ஆண்டு கால திட்டத்திற்கு மாறாகவும் இருந்தது. அதில் தோனிக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபோன்ற கருத்து வேறுபாடுகளாலும் முடிவு எடுக்கும் விஷயத்தில் இருந்து வேறுபாடுகளாலும் சிஎஸ்கே அணியில் விரிசல் ஏற்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டு உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐந்து போட்டிகளில் விளையாடியது. 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.
முதல் ஆண்டில் அவரது கேப்டன்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தது, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறுமா என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் தான் முதல் ஐந்து போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தது. அப்போதே சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு ஊசலாட்டத்தை சந்தித்தது.
அப்போதுதான் ருதுராஜுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டு, முறிவு ஏற்பட்டதால் அவர் இனி ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாட மாட்டார் என்ற சிஎஸ்கே அணியில் இருந்து தகவல் வெளியானது. பின்னர் அவர் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதற்கு பிறகு அவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
மேலும், கால்பந்தை கையில் எடுத்து இரண்டு கைகளாலும் மாற்றி, மாற்றி சுழற்றிக் கொண்டிருந்தார். முழங்கையில் காயம் ஏற்பட்ட ஒருவர் இத்தனை அஜாக்கிரதையாக அதிக எடை உடைய கால்பந்தை எடுத்து விரலில் வைத்து சுற்றிக் கொண்டிருப்பாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. பலரும் இதை சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதன் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியில் நீடிப்பார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், ஆறாவது போட்டியில் தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்ததற்குப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட்க்கு மாற்று வீரராக ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தான் ருதுராஜ், தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் எழுந்திருக்குமா? என்ற சந்தேகம் வலுவடைந்து இருக்கிறது. ருதுராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த வீரராகவும் இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
அவர் கேப்டன் என்பதை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டு கூட அவர் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்திருந்தார். ஆனால், கேப்டனாக அவர் சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனம் உள்ளது. என்னதான் தோனி ஃபீல்டிங் வியூகத்தில் ஆலோசனைகள் அளித்தாலும், அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட் செய்யும் அணி மாற்றம் மற்றும் பவுலிங் மாற்றம் ஆகியவற்றில் தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் வரிசை தான் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் துவக்க வீரராக ரச்சின் ரவீந்திரா மட்டுமே இதுவரை சில போட்டிகளிலும் நிலையாக விளையாடி இருக்கிறார்.
இன்னொரு துவக்க வீரர் இடத்திற்கு ராகுல் திரிபாதி மற்றும் டெவான் கான்வே ஆகியோர் மாற்றி, மாற்றி விளையாடியுள்ளனர். அதில் ஒரு போட்டியில் கான்வே அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்திருக்கிறார். ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இதுவரை சரியாக பேட்டிங் செய்யவில்லை.
விஜய் ஷங்கர் இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்திருந்தாலும், அந்த இரண்டு போட்டிகளிலும் அவரது ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த பயனும் இல்லை. அந்த அணி தோல்வியை மட்டுமே அடைந்தது. அவரது ஆட்டம் அதிக வேகத்தில் இல்லை என்ற விமர்சனமும் உள்ளது.
தோனியும் ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடினாலும் மற்றொரு போட்டியில் மந்தமாக விளையாடுகிறார் என்ற விமர்சனம் உள்ளது. இப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. அதற்காக அணியில் இதுவரை நான்கு முறை மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
பந்துவீச்சிலும் மூத்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வேகப்பந்து வீச்சில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மதீஷா பதிரானா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இது போன்ற பின்னடைவுகளால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நிலைகுலைந்து உள்ளது. இதற்கு கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் மட்டும் தான் காரணமா? என்பது தெரியவில்லை.
நிச்சயமாக அவர் இளையவர் என்பதால் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் சிஎஸ்கே நிர்வாகம் நிச்சயமாக ஐபிஎல் ஏலம் மற்றும் அணி தேர்வில் நிறைய முடிவுகளை எடுத்திருப்பார்கள். எனவே அவர் மீது மட்டும் குறை சொல்வதும் நியாயம் இல்லை என்பதே உண்மை. ருதுராஜ் கெய்க்வாட்க்கு உண்மையாகவே காயம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
சிஎஸ்கே போன்ற ஒரு இந்தியாவின் முன்னணி ஐபிஎல் அணியுடன் அவர் கருத்து வேறுபாடு கொள்ள மாட்டார். அது அவருக்கு அவருடைய கிரிக்கெட் வாழ்வில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.