CSK வீரரின் தாயார் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய அணி.. MI எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார்
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் தாயார் காலமானார். இந்த துயரச் செய்தியை அணி நிர்வாகம் வியாழக்கிழமை மதியம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தது. நான்கு சீசன்களாக சிஎஸ்கேவில் அங்கம் வகிக்கும் முகேஷ், நடப்பு சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இது குறித்து சிஎஸ்கே வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "முகேஷ் சௌத்ரியின் தாயார் மறைவுக்கு சிஎஸ்கே குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் முகேஷ் மற்றும் அவரது குடும்பத்துடன் நாங்கள் துணையாக நிற்கிறோம், எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனைகளிலும் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்," என தெரிவித்துள்ளது.

முகேஷ் 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்காக அறிமுகமாகி, முதல் சீசனில் 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 9.31 எக்கானமி உடன் வீழ்த்தினார். எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் அவருக்கு நான்கு ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொத்தம் அவர் 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், 9.96 என்ற எக்கானமியையும் பெற்றுள்ளார்.
ஏற்கனவே கலீல் அகமது காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனுக்குள் முகேஷ் சௌத்ரி அணிக்குள் வந்தார். தற்போது முகேஷ் தாயார் காலமான நிலையில், அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இதனால் ராமசந்திரா கவுஸ் அல்லது ஆகாஷ் மத்வால் சிஎஸ்கே அணிக்குள் இன்றைய ஆட்டத்தில் வருவார் என எதிர்பார்க்கலாம்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே மூன்று தொடர் தோல்விகளுடன் ஆரம்பித்து, டெல்லி மற்றும் கொல்கத்தாவுக்கு எதிராக அடுத்தடுத்து வென்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 ரன்களில் தோற்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி தற்போது ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications