பிளெமிங்குக்கு பதிலாக ஹேமங் பதானி? சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரும், கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருபவருமான ஹேமங் பதானி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே - பிளெமிங் தங்களது 18 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்ட நிலையில், 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக புதிய பயிற்சியாளர் குழுவை கட்டமைக்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள சிஎஸ்கே அணியின் உயர்மட்ட அதிகாரிகள், கடந்த சில சீசன்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் ஹேமங் பதானி பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி, கடந்த 2025 மற்றும் 2026 ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முறையே 5 மற்றும் 6வது இடங்களைப் பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து 4 முறை கோப்பையை வென்று கொடுத்தார். ஐஎல் டி20, எஸ்ஏ டி20, லங்கா பிரீமியர் லீக் உள்ளிட்ட பிற டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இவரது செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறி சிஎஸ்கே ரசிகர்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, மோசமான பிளேயிங் 11 தேர்வுகளையும், சொதப்பலான வியூகங்களையும் அவர் வகுத்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், 17 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு நிலையான மற்றும் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்து வந்த பிளெமிங்கிற்குப் பதிலாக, ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சாதிக்காத பதானியை நியமிப்பது சிஎஸ்கே அணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

