சென்னை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேசுகையில், "சேப்பாக்கம் பிட்ச் தான் தோல்விக்கு காரணம்" என அனைத்து பழியையும் அதன் மீது சுமத்தி இருக்கிறார்.
இது இந்த முறை மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது எனவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றி அமைக்கப்பட்டது. மைதானம் முழுமையாக புனரமைக்கப்பட்ட போது இந்த மாற்றம் நிகழ்ந்தது.

அதற்கு முன்பு வரை சென்னை சேப்பாக்கத்தில் மூன்று அல்லது நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை ஆட வைத்தாலே வெற்றி பெற்று விடலாம் என்ற நிலை இருந்ததாக ஸ்டீபன் சுட்டிக் காட்டுகிறார். அதில் ஓரளவு உண்மையும் உள்ளது. ஆனால், சமீப காலமாக சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு விதமான பிட்ச்கள் உள்ளன. ஒன்று மந்தமாக உள்ளது, மற்றொன்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசமமாக ஒத்துழைக்கும் பிட்ச்சாக உள்ளது.
எந்த போட்டிக்கு எந்த மாதிரியான பிட்ச் அளிக்கப்படும் என்பது சரியாக தெரியாத நிலையில் உள்ளதாக ஸ்டீபன் பிளெமிங் சுட்டிக்காட்டி இருக்கிறார். நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்து 196 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்த ஆடிய சிஎஸ்கே அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மோசமாக இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், ஸ்டீபன் பிளெமிங் பிட்ச்சில் உள்ள குறையை மட்டும் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் பேசியதாவது: "நான் கடந்த சில ஆண்டுகளாகவே இதை சொல்லி வருகிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் எங்களுக்கு எந்த விதமான சொந்த மைதான சாதகங்களும் இல்லை. நாங்கள் சேப்பாக்கத்தில் விளையாடாமல் வேறு மைதானத்தை எங்கள் சொந்த மைதானமாக வைத்து ஆடிய போதும் கோப்பை வென்று இருக்கிறோம்."
"நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்களால் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச்சை சரியாக கணிக்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எங்களால் சேப்பாக்கம் பிட்ச்சை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இது புதிய பிரச்சனை அல்ல."
"நாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து எந்த அளவுக்கு பிட்ச் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். சில சமயம் எங்களால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை. இது பழைய சேப்பாக்கம் இல்லை. நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை அழைத்து சென்று ஆடுவதற்கு.."
"இங்கு இருக்கும் ஒவ்வொரு பிட்ச்சும் வெவ்வேறாக உள்ளது. அதை புரிந்து கொள்ள நாங்கள் கடின முயற்சியை செலுத்தி வருகிறோம். சிஎஸ்கே அணியில் அதிரடி பேட்டிங் வரிசை இல்லை என்கிறார்கள். ஆனால், எங்கள் அணியில் அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. இது போன்ற கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை."
"நாங்கள் முதல் பந்தில் இருந்து அடித்து ஆடவில்லை என்பதற்காகவும், எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதற்காகவும் இப்படி சொல்ல முடியாது. இறுதியில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்க்கலாம். நாங்கள் நேர்மறையான கிரிக்கெட்டை ஆடுகிறோம். அதற்காக எங்களை ஒதுக்கி வைக்க முடியாது" என்றார் ஸ்டீபன் பிளெமிங்.