சென்னை: கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் எங்களின் அகாடமியில் ஏற்கனவே இருக்கிறார் என்றும், அவரை சிஎஸ்கே பயன்படுத்தி வருவதாகவும் அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அஸ்வின் இதுவரை ஐஎல்டி20 லீக்கில் மட்டுமே பதிவு செய்துள்ளதாக கூறிய காசி விஸ்வநாதன், எஸ்ஏ20 மற்றும் எம்எல்சி லீக்கில் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த வாரம் ஓய்வை அறிவித்தார். இதன்பின் சர்வதேச லீக் தொடரில் அஸ்வின் விளையாடப் போவதாக அறிவித்த நிலையில், முதற்கட்டமாக ஐஎல்டி20 லீக் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து பிக் பாஷ் மற்றும் எஸ்ஏ20 லீக்கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தில் அஸ்வின் கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிஎஸ்கே குழுமத்தின் தலைவராக என் ஸ்ரீனிவாசன் கொண்டு வரப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீனிவாசன் மகன் ரூபா குருநாத் சிஎஸ்கே குழுமத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். சிஎஸ்கே முதலீடு செய்துள்ள எஸ்ஏ20 லீக், எம்எல்சி தொடர்களிலும் ஸ்ரீனிவாசன் இனி கவனம் செலுத்துவார்.
இருப்பினும் ஒரு ஆலோசகராகவே ஸ்ரீனிவாசன் பணியாற்றுவார் என்றும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காசி விஸ்வநாதன் பேசுகையில், இது சிஎஸ்கே குழுமத்திற்கு மிகப்பெரிய மாற்றம். சிஎஸ்கே அணியின் சிறந்த நிர்வாகி அவர்தான். அவர் மீண்டும் சிஎஸ்கே அணியை நிர்வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரால் அதிகளவில் பயணிக்க முடியாது.
ஆனால் தொடர்ந்து எங்களுடன் தொடர்பில் இருப்பார். நாங்கள் எல்லோரும் சென்னையில் மட்டுமே இருக்கிறோம். இனி ஒவ்வொரு நாளும் ஆலோசிப்போம். சிஎஸ்கெ முதலீடு செய்துள்ள அத்தனை அணிகளுக்கும் இனி ஸ்ரீனிவாசன் தான் பொறுப்பு. அஸ்வினை பொறுத்தவரை ஏற்கனவே எங்களின் அகாடமியில் பொறுப்பில் இருக்கிறார். அவரை ஏற்கனவே பயன்படுத்தி வருகிறோம்.
அவர் இதுவரை எஸ்ஏ20 லீக்கில் விளையாடுவதற்கு பதிவு செய்யவில்லை. தற்போது ஐஎல்டி20 லீக்கில் மட்டுமே பதிவு செய்திருக்கிறார். அந்த லீக்கில் சிஎஸ்கே முதலீடு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அஸ்வினுடன் பயணிப்பதில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதாக பார்க்கப்படுகிறது.