
2020 ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன. செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நடுவே நடக்கும் பெரிய கிரிக்கெட் தொடர் இது.

பிசிசிஐ விதிமுறை
இந்த தொடருக்கு பிசிசிஐ பல விதிமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு அணியும் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்க வேண்டும். வெளி நபர்களை நேரடியாக சந்திக்கக் கூடாது. முதல் வாரத்தில் மட்டும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் போன்றவை அவற்றில் சில.

பாதிப்பு
இந்த நிலையில், சிஎஸ்கே அணி சென்னையில் ஒரு வாரம் பயிற்சி முகாம் நடத்தி விட்டு, துபாய் சென்றது. அங்கே எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் அணியை சேர்ந்த ஒரு வீரர் மற்றும் 12 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியானது.

யார் அந்த வீரர்?
அந்த ஒரு வீரர் தீபக் சாஹர் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஒரு வீரருக்கும் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் ருதுராஜ் கெயிக்வாட். இவர் உள்ளூர் வீரர் ஆவார். இந்தியா ஏ அணியிலும் ஆடி உள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பல உதவியாளர்களுக்கும் பாதிப்பு உள்ளது.

சுரேஷ் ரெய்னா
இதற்கிடையே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா துபாயில் இருந்து இந்தியா கிளம்பி வந்து விட்டார். அவர் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது. இந்த தகவல் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

விளக்கம் அளிக்கவில்லை
இதுவரை சிஎஸ்கே அணியோ, ஐபிஎல் தொடரை நடத்த உள்ள பிசிசிஐ நிர்வாகமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பே தெரியும் என கூறப்படுகிறது. ஆனாலும், அவர்களாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அறையை விட்டு வர முடியாது
தற்போது ரெய்னா தவிர்த்து மற்ற சிஎஸ்கே அணி வீரர்கள் துபாயில் தாங்கள் தங்கி உள்ள ஹோட்டலிலேயே உள்ளனர். அவர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அனைவருக்கும் ஒரே வாரத்தில் நான்காவது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











