சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பெருமைக்காக அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவரை வாங்கியதற்கு பதிலாக வேறு பல இளம் வீரர்களையும், அனுபவ வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கி இருக்க முடியும். அதன் மூலம் தற்போது பேட்டிங்கிலும், வேகப்பந்து வீச்சிலும் ஏற்பட்டிருக்கும் பலவீனத்தை சிஎஸ்கே அணி சரி செய்து கொண்டிருக்க முடியும்.
ஆனால், அஸ்வினை எப்படியும் வாங்க வேண்டும், தங்களின் விசுவாசத்தை வெளி காட்ட வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த ஒரு முடிவு தற்போது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினை வாங்கியதற்காக தற்போது அவர் பிளேயிங் லெவனில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவே விமர்சனமும் உள்ளது.

அவர் பந்து வீசும்போதும் அதிக ரன்களை வாரி வழங்குகிறார், விக்கெட் வீழ்த்துவதிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக யாரை ஏலத்தில் வாங்கி இருக்கலாம் என சில யோசனைகளை இங்கே பார்க்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3.8 கோடிக்கு வாங்கப்பட்ட பிரியன்ஷ் ஆர்யாவை சிஎஸ்கே அணி வாங்கியிருக்கலாம். அவர் துவக்க வீரராக அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கான்வே துவக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர்.
அவர்கள் இருவரும் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த இடத்தில் ப்ரித்வி ஷா இருந்திருந்தால் சிஎஸ்கே அணிக்கு அது உதவிகரமாக இருந்திருக்கும். அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 4.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்வஸ்திக் சிக்காராவும் துவக்க வீரர்தான். அவரையும் வாங்கி இருக்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாமை சிஎஸ்கே அணி வாங்கியிருக்கலாம். அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2.6 கோடி ரூபாய்க்குத்தான் வாங்கியது. இவர் அஸ்வின் இடத்தில் சரியாக பொருந்திப் போவார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி பேட்ஸ்மேன் அன்மோல்ப்ரீத் சிங் அந்த அணியால் 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவர் ஃபினிஷராக சிஎஸ்கே அணியில் ஆறாம் வரிசை அல்லது ஐந்தாம் வரிசையில் பொருந்தி இருப்பார். தற்போது விஜய் சங்கருக்கு பதிலாக இவரை ஆட வைத்திருக்கலாம்.
அனுபவ ஆல்ரவுண்டர் ஒருவர் தேவை என்னும் பட்சத்தில் கிளென் மேக்ஸ்வெல்-லை அஸ்வினுக்கு பதிலாக வாங்கி இருக்கலாம். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அவர் பேட்டிங்கில் கைகொடுக்காமல் போயிருந்தாலும் பந்துவீச்சில் நிச்சயம் உதவி இருப்பார். சில சமயம் பேட்டிங்கிலும் அவர் அதிரடி ஆட்டத்தை ஆடியிருப்பார்.
மிகவும் அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீரர் என்பதால் அஸ்வினுக்கு பதிலாக மேக்ஸ்வெல்லை வாங்கி இருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும். இதுபோல பல திறமையாளர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் கோட்டை விட்டுவிட்டது. இளம் வீரர்களை அடையாளம் காண்பதிலும் தோற்றுவிட்டது.