மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பிடித்து மோசமான தோல்வியை தழுவியது. இந்த சூழலில் அடுத்த சீசனில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக அந்த அணி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த மெகா ஏலத்தில் ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய் கொடுத்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை சிஎஸ்கே வாங்கியது. ஆனால் அவர் பந்துவீச்சில் மொத்தமாகவே ஏழு விக்கெட்டுகளை தான் விழித்திருந்தார். இதனால் அஸ்வினை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியேற்ற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விஷயத்தில் நான் சிஎஸ்கே எடுக்கும் முடிவை சரி என்பேன். அஸ்வினை வெளியேற்றினால் அது உண்மையிலே சூப்பரான முடிவு. அஸ்வினை நீக்குவதன் மூலம் சிஎஸ்கே அணியிடம் கிட்டத்தட்ட 42 கோடி மினி ஏலத்தில் கையிருப்பு இருக்கும்.
ஏற்கனவே பல இளம் வீரர்கள் கடந்த தொடரின் இறுதியில் சிறப்பாக செயல்பட்டார்கள். இதனால் மினி ஏலத்தில் சிறந்த அணியை அவர்களால் கட்டமைக்க முடியும். அஸ்வின் தேர்வு செய்த போது அது ஒரு நல்ல முடிவாக இருக்கும் என சிஎஸ்கே நிர்வாகம் நம்பியது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் செயல்படவில்லை. இது பிரான்ச்சைஸ் கிரிக்கெட் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஒன்றும் தமிழ்நாடு கிரிக்கெட் கிடையாது. அவருடைய சாதனைக்காக நீங்கள் அஸ்வினை மதிக்கலாம். ஐபிஎல், இந்தியா, சிஎஸ்கே, தமிழ்நாடு என அனைத்து அணிகளுக்காகவும் அவர் நன்றாக விளையாடி இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு சீசனாக சிஎஸ்கே பிளே ஆப் கூட செல்லவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த சீசனில் அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் அவரை நீக்குவதில் தவறில்லை. கார்ப்பரேட் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் இவ்வாறுதான் இருக்கும். நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் உங்களை அனுப்பிவிடுவார்கள். இதனால் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட ஒன்றுமே இல்லை. இந்த பிரான்சைஸ் கிரிக்கெட்டில் சச்சின், தோனி, கோலி போன்ற வீரர்களுக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கும் என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.