சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு ஒரீரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், வீரர்களைத் தக்கவைக்கும் (Retention) நடைமுறை குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் (Rajasthan Royals) கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் நீடிப்பாரா என்பது குறித்த வதந்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
2025 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு, சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேற விரும்புவதாகவும், தன்னை விடுவிக்க அல்லது வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சஞ்சு சாம்சன் மற்றும் அணி நிர்வாகத்திற்கு இடையேயான உறவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, எம்.எஸ். தோனிக்குப் பிறகு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்சனை வர்த்தகம் மூலம் வாங்க ஆர்வம் காட்டுவதாக வதந்திகள் பரவின.
ஆனால், இந்த வதந்திகள் குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனைத் தங்கள் அணிக்கு வர்த்தகம் செய்யும் முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நிராகரித்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சு சாம்சனைத் தக்கவைப்பதா, இல்லையா என்ற இறுதி முடிவு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரதான உரிமையாளரான மனோஜ் படாலே என்பவரின் கையில் உள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை ராஜஸ்தான் அணி சாம்சனைத் தக்கவைக்க முடிவு செய்தாலும், அவர் இனிமேல் அணியின் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் சாம்சன் காயம் காரணமாக விலகியிருந்தபோது கேப்டனாகப் பொறுப்பேற்ற ரியான் பராக், நிரந்தர கேப்டன் பதவிக்கான வலுவான தேர்வாக உருவாகியுள்ளார். அதேபோல், இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் கேப்டன்சி தேர்வுக்குரிய ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சு சாம்சன் 2013ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இதுவரை 149 இன்னிங்ஸ்களில் விளையாடி, 26 அரை சதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 4,219 ரன்களைக் குவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சாம்சன், அப்போதிருந்து அணியை வழிநடத்தி வருகிறார்.