CSK: உன்னை நம்புனதுக்கு.. பேபி ஏபி செய்த சொதப்பல்.. சிஎஸ்கே ரசிகர்களை கதறவிட்ட அந்த ஒரு விக்கெட்!
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டுள்ளது. இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், டிவால்ட் பிரெவிஸ் செய்த சொதப்பல்தான் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி களம் இறங்கியது. கடந்த மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்றிருந்ததால், சிஎஸ்கே அணி இந்த இலக்கை எளிதாக எட்டிவிடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அடுக்கு மாடி சரிவு
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை ஆரம்பம் முதலே நிலைகுலைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இளம் வீரர் ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தாலும், அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மேத்யூ ஷார்ட் மிகவும் நிதானமாக விளையாட, சர்பராஸ் கான் 19 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்.
எதிர்பார்ப்பை உடைத்த பிரெவிஸ்
இந்த இக்கட்டான சூழலில் தான், சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகப் பார்க்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் களமிறங்கினார். தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான இவர், கடந்த இரண்டு போட்டிகளுக்கு முன்பு தான் முதன்முறையாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காகக் களமிறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், எந்த ஒரு வெளிநாட்டு வீரருக்கும் கிடைக்காத இமாலய வரவேற்பை அவருக்கு அளித்தனர். 'பேபி ஏபி' என்று அழைக்கப்படும் அவர் , ஏபி டிவில்லியர்ஸ் போலவே சிக்ஸர் மழை பொழிவார் என அனைவரும் நம்பினர்.
ஆனால், நேற்றைய போட்டியில் அந்த நம்பிக்கையை அவர் சுக்குநூறாக உடைத்தார். மிக முக்கியமான நேரத்தில் களமிறங்கிய பிரெவிஸ், 4 பந்துகளைச் சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். இது சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பை காலி செய்தது. பின்னர் வந்த சிவம் துபே, ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
புள்ளிப்பட்டியலில் பின்னடைவு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிஎஸ்கே அணியில் இணைந்த பிரெவிஸ், இவ்வளவு முக்கியமான கட்டத்தில் பொறுப்பின்றி ஆடியது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பிளே-ஆஃப் கனவு நனவாக வேண்டுமானால் இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications