சென்னை: சிஎஸ்கே வீரர் டிவால்ட் பிரவீஸ்க்கு கூடுதல் பணம் கொடுத்து அந்த அணி நிர்வாகம் வாங்கியதாக அஸ்வின் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருத் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் போது சிஎஸ்கே வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக பிரவீஸ் அணிக்குள் வந்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அஸ்வின், மற்ற அணிகள் எல்லாம் பிரவீசை வாங்க தவறிவிட்டது. ஆனால் சிஎஸ்கே அணி கூடுதல் பணம் கொடுத்து பிரவீசை வாங்கியதாக கூறினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் கூடுதல் பணம் எல்லாம் கொடுக்கவில்லை. விதிப்படிதான் பிரவீசை வாங்கி இருந்தோம் என்று தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் அஸ்வின், தாம் சொன்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பணத்தைப் பற்றி பேசவில்லை. பிரவீஸ் பேட்டிங்கை பற்றி தான் பேசினேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அஸ்வினின் இந்த பேச்சுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், சிஎஸ்கேவின் இந்த விளக்கம், அஸ்வினின் பேட்டிக்கு பின் வெளியாகியிருக்கிறது. அஸ்வின் செய்த விஷயம் மிகவும் தவறான ஒன்று. ஒரு அணியில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அதே அணியில் தான் பிரவீசும் விளையாடுகிறார்.
அப்படி இருக்கும் போது மற்ற வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது. நீங்கள் சொன்னது தவறான அர்த்தமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், நீங்கள் சொன்ன விஷயம் நிச்சயம் ஒரு பிரச்சனையை தான் ஏற்படுத்தும். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் மற்ற வீரரின் ஊதிய ஒப்பந்தம் குறித்து எப்போதும் பேசக்கூடாது.
அஸ்வினின் இந்த பேச்சு காரணமாக சிஎஸ்கே அணி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த விளக்கத்தில் ஒரே ஒரு நன்மை மட்டும் இருந்தது. அதில் பிரவீஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எங்களுக்காக தான் விளையாடுவார் என்பதை சிஎஸ்கே உறுதியாக கூறிவிட்டது என்று அனிருதா ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.