சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாமல் இருந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவால்ட் பிரெவிஸ் மீண்டும் களமிறங்கும் தேதியை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நடந்த பயிற்சி முகாமின் போது பிரெவிஸுக்கு விலாப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரெவிஸ் தனது உடல்நிலை குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏப்ரல் 11ம் தேதி உங்களை மைதானத்தில் சந்திக்கிறேன், இனி நாங்கள் எங்கு விளையாடினாலும் அனைத்து போட்டிகளிலும் நான் களத்தில் இருப்பேன் என மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்தார். இது சிஎஸ்கே அணி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பிரெவிஸ் விளையாடுவார் என்பதை சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் உறுதி செய்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய பிளெமிங், பிரெவிஸ் இல்லாதது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பு தான். டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு இடையில் 5 நாட்கள் ஓய்வு உள்ளது. இந்த இடைவெளியில் அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என உறுதியாக நம்புகிறோம் என கூறினார்.
இதற்கிடையே டிவால்ட் பிரெவிஸ் கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக அவர் சென்னை மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். உதவி பயிற்சியாளர் ராஜீவ் குமார் வீசிய பந்துகளை அவர் எந்தவித வலியும் இன்றி சுமார் 20 நிமிடங்கள் வரை அதிரடியாக எதிர்கொண்டார்.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கி உள்ளது. முதல் வெற்றிக்காக கடுமையாக போராடி வரும் அந்த அணிக்கு, டிவால்ட் பிரெவிஸின் வருகை பேட்டிங் வரிசையை பலப்படுத்தி வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.