சென்னை: 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் எம்.எஸ். தோனி, இந்த சீசனின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்குக் கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல் இரு வாரங்களில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
தோனிக்குக் காயம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேறொரு விவாதம் அனல் பறக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகமே தோனியை அணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகப் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருக்கையில், நிர்வாகம் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வாய்ப்பில்லை என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். அவர் தோனிக்கு மாற்றாகத்தான் அணியில் சேர்க்கப்பட்டதாக ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், தோனியும் இந்த 2026 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் எனச் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இப்போது தோனிக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால், விக்கெட் கீப்பர் பொறுப்பைச் சஞ்சு சாம்சன் கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி குணமடைந்து வரும் வரை சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.
தோனிக்கு ஏற்கனவே முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவர் நீண்ட காலம் ஓய்வில் இருந்தார். கடந்த சில சீசன்களாகவே அவரால் வேகமாக ரன் ஓடுவது சிரமமாக இருந்ததை நாம் பார்த்தோம். இப்போது கணுக்காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் முதல் 2 வாரங்களுக்கு விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் களமிறங்கினாலும், 'இம்பாக்ட் பிளேயர்' விதியின் கீழ் கடைசி சில ஓவர்களில் மட்டும் பேட்டிங் செய்ய வரலாம்.

தோனி தானாகவே முன்வந்து முதல் சில போட்டிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கலாம் அல்லது அணியின் எதிர்காலத்தைக் கருதி சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க இந்தத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தோனி இல்லாத சிஎஸ்கே போட்டிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். இருப்பினும், தொடரின் பிற்பாதியில் தோனி முழு உடல் தகுதியுடன் களமிறங்கி அதிரடி காட்டுவார் என்று சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கமே தோனி பற்றிய சர்ச்சையுடன் ஆரம்பித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.