சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.2 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இளம் வீரர் பிரசாந்த் வீருக்கு, எம்எஸ் தோனி மிக முக்கியமான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி ஒரு உள்ளூர் வீரருக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ரவீந்திர ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரராக பார்க்கப்படும் 20 வயதான இடதுகை ஆல்ரவுண்டரான பிரசாந்த் வீர், நடப்பு சீசனில் சிஎஸ்கே ஜெர்சியில் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த நிலையில், எம்எஸ் தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து பிரசாந்த் வீர் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தற்போதைக்கு நாங்கள் கிரிக்கெட் குறித்து அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. ஆனால், எனக்கு கிடைத்த இந்த மிகப்பெரிய தொகையை தேவையில்லாமல் வீணாக செலவழிக்கக் கூடாது என்றும், பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும் என்றும் எம்எஸ் தோனி எனக்கு மிகவும் அக்கறையுடன் அறிவுறுத்தினார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இளம் வீரரின் எதிர்காலம் குறித்து தோனி காட்டியுள்ள இந்த அக்கறை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய பிரசாந்த் வீர், 10 போட்டிகளில் களமிறங்கி 64 என்ற அபாரமான சராசரியுடன் 320 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் காரணமாகவே ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி அவரை தனது பயிற்சி முகாமுக்கு நேரில் அழைத்திருந்தது. அவரது திறமையை நேரில் பார்த்த பிறகே சிஎஸ்கே அணி அவரை வளைத்துப் போட்டது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது 2026 ஐபிஎல் பயணத்தை மார்ச் 30 ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் தொடங்குகிறது. இதில் பிரசாந்த் வீரின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
