சென்னை: 2026 ஐபிஎல் சீசன் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் தோனியின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தோனி இந்த முறை 'இம்பாக்ட் பிளேயர்' விதியின் கீழ் ஒரு மாற்று வீரராக மட்டுமே சிஎஸ்கே அணியால் பயன்படுத்தப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அஸ்வின், தோனி ஒரு இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதில் தனக்குச் சற்றும் உடன்பாடில்லை என்று தெரிவித்துள்ளார். "தோனி அணியில் இடம் பெற்றால், அவர் நிச்சயம் ஆடும் 11 வீரர்களில் ஒருவராகத் தான் இருக்க வேண்டும். அவர் விளையாட விரும்பினால் முழுமையாக விளையாடட்டும், இல்லையென்றால் அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறலாம். ஆனால் ஒரு மாற்று வீரராக அவரைப் பயன்படுத்துவதை என்னால் ஏற்க முடியாது" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

தோனி கடந்த 3 மாதங்களாகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அஸ்வின், அவர் களமிறங்க 100 சதவீதம் உறுதியாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார். தோனி இப்போது 6-வது வரிசையில் இறங்கிப் பெரிய இன்னிங்ஸ் ஆடும் பேட்ஸ்மேனாக இல்லாவிட்டாலும், விக்கெட் கீப்பராகவும், களத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அஸ்வின் குறிப்பிட்டார்.
பந்துவீச்சாளர்களைச் சரியாகக் கையாளுவதிலும், இக்கட்டான சூழலில் ஆட்டத்தைத் திசை திருப்புவதிலும் தோனியின் அனுபவம் சிஎஸ்கே அணிக்குத் தேவை. இதே கருத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் வழிமொழிந்துள்ளார். தோனி போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமை கொண்ட வீரர், முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் அல்லது ஆட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

இந்த சீசனில் சிஎஸ்கே தனது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை வலிமைப்படுத்தியுள்ளதால், தோனி கடைசி சில ஓவர்களில் மட்டும் வந்து அதிரடி காட்டும் 'பினிஷர்' வேலையைச் சரியாகச் செய்ய முடியும். 14 லீக் போட்டிகளில் சில போட்டிகளில் மட்டுமே அவர் முன்னதாக பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் வரலாம். மற்ற நேரங்களில் அவர் அணியின் "பெரிய அண்ணனாக" இருந்து வீரர்களை வழிநடத்துவார் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
