
புனே: கிரிக்கெட் இந்தியாவில் எந்தளவுக்கு பிரபலம் என்பதை, சிறப்பு ரயில் விட்டதன் மூலம் உலகம் புரிந்து கொண்டிருக்கும். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கும், கேப்டன் கூல் டோணிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. புனேயில் நடந்த போட்டியின்போது, ஒரு பெண் ரசிகை, தன்னுடைய காதலை மைதானத்தில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி மீண்டும் களமிறங்கியுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். போராட்டங்கள் காரணமாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருந்த போட்டிகள், புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் புனேயில் நேற்று நடந்தது. இதற்காக ரசிகர்கள் சென்னையில் இருந்து சிறப்பு ரயிலில் சென்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, புனே போட்டியின்போது, காலரியில் இருந்த ஒரு பெண், ஒரு அட்டையை கையில் வைத்திருந்தார்.
அதில், என்னுடைய வருங்கால கணவர் மன்னிக்க வேண்டும். எப்போதும் என்னுடைய முதல் காதலன் டோணிதான். டோணி ஐ லவ் யு என்று எழுதியுள்ளார். கிரிக்கெட் மீது ரசிகர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
இது தொடர்பாக சமூகதளங்களில் பலர் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், டோணியின் மனைவி சாக் ஷி அதிர்ச்சி அடைந்திருப்பது போல் ஒருவர் படம் வெளியிட்டுள்ளார்.