டெல்லி: இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் டெல்லி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தின்போது, செய்த ஒரு செயல், அவரது எளிமையின் உச்சத்தைக் காட்டியது. அப்போது ஒரு சிஎஸ்கே (CSK) ரசிகர், அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறி, சிஎஸ்கே அணிக்கு மாறி விடுமாறு கோரிக்கை விடுத்தார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் அவருக்கு இதே கோரிக்கையை விடுதது வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தின்போது, சாய் சுதர்சன், தனது பயிற்சி உடையில், பவுண்டரி கோட்டிற்கு அருகே தரையில் அமர்ந்து, மைதானத்தில் பந்து பொறுக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து சாதாரணமாக சாண்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

சாய் சுதர்சனின் இந்த எளிமையான செயல் ஒருபுறம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், மறுபுறம் ஒரு ரசிகரின் கோரிக்கை மைதானத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சாய் சுதர்சன் பவுண்டரி லைனில் அமர்ந்திருந்தபோது, ஒரு ரசிகர், "குஜராத் டைட்டன்ஸை விட்டுவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்க! எங்க தல தோனி கூட வந்து விளையாடுங்க!" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.
2025 ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களைக் குவித்து, 'மிஸ்டர் கன்சிஸ்டன்ட்' என்று பெயர் பெற்றார் சாய் சுதர்சன். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த வீரர், உள்ளூர் அணியான சிஎஸ்கே-வில், 'தல' தோனியின் வழிகாட்டுதலில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகனின் கனவாக உள்ளது.
ஐபிஎல்-லில் ஜொலித்த சாய் சுதர்சன், டெல்லி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து, தான் மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் ஏற்ற வீரர் என்பதை நிரூபித்துள்ளார். ஒருபுறம் களத்தில் தனது திறமையாலும், மறுபுறம் களத்திற்கு வெளியே தனது எளிமையாலும் அனைவரையும் கவர்ந்து வரும் சாய் சுதர்சன், விரைவில் மஞ்சள் ஜெர்சியில், சேப்பாக்கம் மைதானத்தில் 'தல' தோனியுடன் களமிறங்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.