சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் புலம்பி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் அளித்த பேட்டி சென்னை அணி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் வென்றாலும் சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடையாது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர்.

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் காயம், மெகா ஏலத்தில் செய்த தவறு, பிளேயிங் லெவன் மாற்றம், தோனியின் கேப்டன்சி என்று ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். முதல் போட்டிக்கு இருந்த டிக்கெட் தேவை, தற்போது குறைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் நேரில் சென்று போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இதனிடையே ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வியடைந்த பின் ரசிகர் ஒருவர் அளித்த பேட்டி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ரசிகர் பேசுகையில், 2010ல் தென்னாப்பிரிக்காவுக்கு சாம்பியன்ஸ் லீக் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியை அழைத்து சென்றான் என் தலைவன்.. என்ன பிட்ச், என்ன கண்டிஷனு எதுவும் தெரியாது.
அப்போது இந்தியாவில் இருந்து சென்ற மும்பை, ஆர்சிபி அணிகளும் திணறினார்கள்.. முதல் போட்டி நியூசிலாந்து அணி சென்ட்ரல் டிஸ்ட்ரிட் அணிக்கு எதிராக ஆடினோம்.. மொத்த நியூசிலாந்து அணியுடன் அதில் இருந்தார்கள். அந்த போட்டியில் வென்றுவிட்டு, அடுத்ததாக ஜெயவர்தனேவின் வயாபா அணியை எதிர்கொண்டோம். மொத்த இலங்கை அணியும் இருக்கிறார்கள்.
அதிலும் வென்றோம். சாம்பியன்ஸ் லீக் பற்றி சில தற்குறிகளுக்கு தெரியாது. அதன்பின் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஆடியது. ஆரோன் ஃபின்ச் தலைமையில் மொத்த ஆஸ்திரேலியா அணியும் ஆடினார்கள். அந்த போட்டியை டிரா செய்த போதும், சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தோம். அதன்பின் தென்னாப்பிரிக்காவின் வாரியர்ஸ் அணியை சொந்த மண்ணிலேயே வென்றோம்.
ஆனால் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் வாரியர்ஸ் அணி வந்து நின்றது. அப்போது முதல் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனாலும் வாரியர்ஸ் அணியை மண்ணை கவ்வ வைத்தான் என் தலைவன் தோனி. தென்னாப்பிரிக்கா சென்று கோப்பையை தூக்கி வந்தாரு.. அன்றில் இருந்து தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா கூட தோனியால் மிரண்டுபோனார்கள்.
அதன்பின் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சிஎஸ்கே அணி கோப்பையை வென்று கொண்டே இருந்தது. திடீரென இந்த சீசனில் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றபின், சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்துவிட்டார்கள். மற்றபடி சிஎஸ்கே ரசிகர்கள் யாரும் தோனியை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.