சென்னை : ஐபிஎல் தொடரில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது. சென்னையில் தத்துப் பிள்ளையான மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி தொடர் என்பதால் இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு குறைந்த அளவிலே டிக்கெட் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை சென்னையும் லக்னோவும் மோதிய ஆட்டத்திற்கு கூட சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு கேலரிகள் மட்டும்தான் ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டது.

மற்ற டிக்கெட்டுகள் எல்லாம் ஸ்பான்சர்களுக்கும், செலிபிரடிகளுக்கும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதல் போட்டியில் சில இடங்களில் பார்வையாளர்கள் வரவே இல்லை. இதற்கு காரணம் போட்டியை பார்க்க விருப்பம் இல்லாதவர்களுக்கு இலவச டிக்கெட் கிடைப்பதுதான் என்று கூறப்படுகிறது.
தோனியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்பதற்காக பல ரசிகர்கள் இரவு பகலாக டிக்கெட் வாங்க காத்துக் கொண்டிருந்த நிலையில் வெறும் இரண்டு கேலரிகள் மட்டும் டிக்கெட்டுகளை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டு மற்ற டிக்கெட்டை வெளிச்சந்தையிலும் ஸ்பான்சர்களுக்கும் வழங்குகிறார்கள் என்று சர்ச்சை அண்மையில் வெடித்தது.
இந்த நிலையில் இரண்டாவது ஆட்டம் வரும் புதன்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டிக்கெட் விற்பனை வரும் ஒன்பதாம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியை போல் இந்த ஆட்டத்திற்கும் வெறும் இரண்டு கேலரிகளில் மட்டும் டிக்கெட் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சிஎஸ்கே ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது. முதல் போட்டியில் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டாவது போட்டிக்காவது முழு டிக்கெட் விற்பனைக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் அதனை சிஎஸ்கே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. வரும் ஒன்பதாம் தேதி காலை 9:30 மணிக்கு 1500 ரூபாய் டிக்கெட் மட்டும் கவுண்டரிலும் 2000, 2500, 3000 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.