மும்பை இந்தியன்சை வீழ்த்திய சிஎஸ்கே
கடந்த மாதம் 19ம் தேதி ஐபிஎல்லின் இந்த சீசன் துவங்கிய நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது. குறைவான பயிற்சி போட்டிகள், கொரோனா வைரஸ் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் முதல் போட்டியின் இந்த வெற்றி ரசிகர்களை வெகுவாக உற்சாகத்திற்கு உள்ளாக்கியது.
நெருக்கடிக்கு உள்ளான சிஎஸ்கே
இந்த வெற்றிகள் வழக்கம் போல தொடரும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த வேளையில், அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அடுத்தடுத்து 3 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி கண்டது. இதனால் அந்த அணிக்கு நெருக்கடிகள் மேலும் அதிகரித்தது. அதிரடி முடிவுகளை தோனி எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக பல்வேறு விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சிஎஸ்கே அபார வெற்றி
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அந்த அணியின் 5வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிசின் அபார ஆட்டத்தால் சிஎஸ்கே ஐபிஎல் பட்டியலில் கீழ் நிலையிலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ரசிகர்கள் பாராட்டு
இந்நிலையில் இந்த வெற்றி, சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை கிளப்பியுள்ளது. ரசிகர்களின் ஆரவாரமான டிவீட்களால் டிவிட்டர் பக்கமே உற்சாகத் தீயில் சிக்கியது. பாப் டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சனுக்கும் தனித்தனியாக வாழ்த்துக்களை பகிர ரசிகர்கள் மறக்கவில்லை.
ரசிகர்கள் உற்சாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐபிஎல்லில் தோனியின் 100 கேட்ச் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் தூக்கியதை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களது டிவீட்கள் இருந்தன.