சென்னை: ஐபிஎல் டி-20 போட்டித் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அடுத்த ஆட்டங்களுக்கான டிக்கெட்களை வாங்குவதற்கு, ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
ஐபிஎல் டி-20 போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது. இதுவரை 16 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி மீண்டும் களமிறங்கியுள்ளதால், இந்த சீசன் களைகட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் ஆட்டங்கள் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டங்களால், சென்னையில் நடைபெறவிருந்த 6 ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்ப்டடுள்ளன. சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் மோதும் சீசனின் 17வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் புனேவுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணி 22ம் தேதி ஐதராபாத்தில் ஐதராபாத் அணியுடனும், 25ம் தேதி பெங்களூருவில் பெங்களுரு அணியுடனும் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. சென்னையில் சிஎஸ்கே ஆட்டங்களை பார்க்க முடியாத விரக்தியில் இருந்த ரசிகர்கள், தற்போது பெங்களூரு மற்றும் ஐதராபாத் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கு தயாராகி உள்ளனர். அந்த ஆட்டங்களுக்கான டிக்கெட்களை சிஎஸ்கே ரசிகர்கள் வாங்கி வருகின்றனர்.