கொரோனா வைரஸ் பாதிப்பு
சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதில் ஒருவர் மட்டுமே குணமடைந்துள்ளார். இருவரில் ஒருவரான ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு இன்னும் பாதிப்பு நீங்கவில்லை. அவர் முதல் சில போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது.
முக்கிய வீரர்கள் இல்லை
அடுத்து அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். மறுபுறம் அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் இந்த சீசனில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். இரண்டு முக்கிய வீரர்கள், ஒரு இளம் வீரர் இல்லாத நிலையில் சிஎஸ்கே அணி பயிற்சி செய்து வருகிறது.
கண்ணாமூச்சி
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் சமூக வலைதள அட்மின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேடிக்கையான ஒரு விளையாட்டை நடத்தினார். கண்ணாமூச்சி போல, பேட்டை வைத்து முகத்தை மறைத்திருக்கும் தோனியின் புகைப்படத்தை வெளியிட்டார்.
இது யார்?
இது யார் என கண்டுபிடிக்க முடியுமா? என அந்த பதிவின் கீழ் கேள்வி இடம் பெற்று இருந்தது. கூடவே நேரடி பதிலை யாரும் சொல்லக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடும் இருந்தது. அந்த புகைப்படத்தை மிக எளிதாக தோனி என கணித்து விட முடியும் என்பதாலேயே இந்த கட்டுப்பாடு.
பல கோடி இதயங்களின் ராஜா
தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களும் சும்மா விட்டு விடவில்லை. ஒருவர் "பல கோடி இதயங்களின் ராஜா" என பதில் கூறி மெய் சிலிர்க்க வைத்தார். மற்றொருவர், "எந்த காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்" எனக் கூறி இருந்தார்.
ஸிவாவின் அப்பா
ஒருவர், "இது ஸிவாவின் அப்பா" என கிண்டல் செய்ய, இன்னொருவர், "கேப்டன் கூல்" என்ற தோனியின் அடையாளத்தை கூறினார். இப்படி மிக சுவாரசியமாக இருந்தது இந்த பதில்கள். சிஎஸ்கே தொடர்ந்து ரசிகர்களை உற்சாகமூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி வீடியோக்கள்
சிஎஸ்கே அணியின் பயிற்சி வீடியோக்கள் அதிகம் வெளியாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நேரலையில் சிஎஸ்கே அணி பயிற்சி வீடியோ வெளியிட்ட போது தோனியின் மனைவி சாக்ஷி, தோனியை காட்டுமாறு கேட்டது வைரல் ஆனது.
சிஎஸ்கே அணியின் முதல் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் செப்டம்பர் 19 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெல்லுமா? யார், யார் அணியில் களமிறங்குவார்கள்? என ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.