ஆக்லாந்து: நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் டை ஆனது. இதனைத் தொடர்ந்து மஹீஷ் தீக்ஷனா அட்டகாசமாக வீசிய சூப்பர் ஓவர் மூலம் இலங்கை அணி அபாரமான வெற்றியைப் பெற்றது.
16வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் இரு நாட்களுக்கு முன் கோலாகலமாக அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

இதில் சென்னை அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த துஷார் தேஷ்பாண்டே அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவரான மஹீஷ் தீக்ஷனா விளையாடாததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் உலகின் எந்த மைதானத்திலும் பவர் பிளே ஓவர்களில் அனைத்து பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தக் கூடிய பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா.
அவர் விளையாடாதது பின்னடைவாகவே உள்ளது. நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருவதால், அதில் தீக்ஷனா விளையாடி வருகிறார். இந்த நிலையில் நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 197 ரன்களை இலக்காக கொண்ட களமிறங்கிய நியூசிலாந்து அணி, கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது.

இலங்கை அணியின் கேப்டன் ஷனகா வீசிய கடைசி ஓவரில், முதல் 5 பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் இஷ் சோதி சிக்சர் விளாச, ஆட்டம் டை ஆனது. இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இலங்கை அணி சார்பாக சூப்பர் ஓவரை மஹீஷ் தீக்ஷனா வீசினார்.
அந்த ஓவரில் தீஷ்கனா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி, 3 பந்துகளில் 12 ரன்கள் விளாசி வெற்றிபெற்றது. இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக மஹீஷ் தீக்ஷனா இருந்தார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட மஹீஷ் தீக்ஷனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனிலேயே சிறப்பாக பந்துவீசினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தீக்ஷனா ஆட்டத்தை பார்த்த சென்னை ரசிகர்கள், அவர் விரைவாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.