அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மீது ரசிகர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே போதுமானது.
தோனியின் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்பதற்காக அவரை காண வேண்டும் என ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி சிஎஸ்கே ரசிகர்கள் அகமதாபாத்திற்கு சென்று வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டனர்.

டிஜிட்டல் டிக்கெட் ஏற்கனவே இருந்த நிலையில் அது போதாது தாளில் டிக்கெட் இருக்க வேண்டும் என பிசிசிஐ கூறியதால் ஊர் பெயர் தெரியாத இடத்தில் அலைந்து திரிந்து டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்திற்கு சென்றனர்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் தங்களது ரயில் டிக்கெட்களை ரத்து செய்துள்ள சிஎஸ்கே வீரர்கள் தற்போது மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஹோட்டலில் தங்கி தயாராக போதிய பணம் இல்லாததால் தமிழக ரசிகர்கள் அகமதாபாத் ரயில் நிலைய பிளாட்பார்மில் தங்கி தூங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்து பேசுகையில் தாங்கள் தோனிக்காக தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்றும் தோனியை பார்த்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.சிஎஸ்கே ரசிகர்களின் இவ்வளவு பெரிய தியாகமும் அன்பும் சென்னை வீரர்களை வாய் அடைக்க வைத்து விட்டது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோயின் அலி, உலகில் வேறு எங்கும் இது போன்ற ஆதரவை எந்த அணிக்கும் காண முடியாது. உங்களுக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார். சென்னை ரசிகர்கள் நேற்று அவ்வளவு கஷ்டப்பட்டாலும் தோனி கோப்பையை வென்றால் அந்த கஷ்டமெல்லாம் மறந்து போய்விடும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.