சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே பார்ட்னர்ஷிப், தோனி அடித்த இரு சிக்சர்கள், மொயின் அலியின் அபார பந்துவீச்சு, இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த துஷார் தேஷ்பாண்டே என்று சென்னை அணியின் முதல் வெற்றி அனைத்து வீரர்களின் பங்களிப்போடு வந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் நேற்றையப் போட்டியில் 25 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி எதிரணியை பிரஷரிலேயே வைத்தார். கிருஷ்ணப்பா கவுதம் பந்துவீச்சில் பேக் ஃபூட்டில் அடித்த மூன்று சிக்சர்களும் ஆச்சரியம் அளித்தது. இதனை சார்பட்டா பரம்பரையில் பசுபதி டான்ஸிங் ரோஸை பாராட்டி பேசும், "ஆப்பனன்ட்-கே அவன்தான் கெலிக்கனும்ன்ற எண்ணத்த கொடுத்துருவான்" என்ற வசனத்தை அப்படியே ருதுராக் ஜெய்க்வாட்டுக்கு பொருத்தி உருவாக்கப்பட்ட மீம் அசத்தல் வகை.

அதேபோல் சேஸிங் போது லக்னோ அணி 5 ஓவர்களிலேயே 70 ரன்களை கடந்த நிலையில், சென்னை அணி ரசிகர்கள் துவண்டு போயினர். அப்போது பந்துவீச வந்த மொயின் அலி மேயர்ஸ் விக்கெட் தொடங்கி அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை புதுப்பேட்டை படத்தில் தனுஷை பாராட்ட அன்பு கதாபாத்திரம் பேசும், "ஒரு ஆள்.. ஒரே ஆள், சிங்கம் மாதிரி நின்னான்" என்ற வசனத்தை பொருத்தி சென்னை அனியின் அலி பாய்-க்கு உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனத்தின் உச்சம்.

நேற்றையப் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேஷ்பாண்டே மூன்றாவது ஓவரை வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 2 நோ - பால், 3 வொய்டுகள் என்று 18 ரன்களை வாரி கொடுத்தார். இதனை தாஸ் படத்தில் மாணவர்களுக்கு பயந்து டாய்லெட்டில் ஒளிந்துகொள்ளும் வடிவேலுவை, அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் பணியாளர், "டேய் நீ இங்கேயே தங்கிட்டீயா" என்று கேள்வி கேட்டு அடி வெளுப்பார். அதுபோல் ரசிகர்கள் தேஷ்பாண்டேவை பார்த்து, "டேய்.. நீ இங்கேயே தங்கீட்டீயா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்ட மீம் குபீர் ரகம்.

சென்னை அணிக்காக நேற்று தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவன் கான்வே இணை முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 9 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் மெக்கல்லம் - டுவைன் ஸ்மித் இணையை ரசிகர்கள் கண் முன் ருதுராஜ் - கான்வே இணை கொண்டு வந்தனர். இதனை வடசென்னை படத்துடன் ஒப்பிட்டு, அன்று எப்படி ராஜன் மக்களுக்காக நின்றாரோ, அதுபோல் இன்று மெக்கல்லம் - ஸ்மித் இணை சென்னை அணிக்காக நின்றதாகவும், இன்று ராஜனின் தொடர்ச்சியாக அன்பு மக்களுக்காக நின்றதை போல், ருதுராஜ் - கான்வே இன்று களத்தில் இருப்பதாக உருவாக்கப்பட்ட மீம் மெர்சல்.

அதேபோல் லக்னோ அணிக்காக ஆடிய கைல் மேயர்ஸ் சேஸிங் போது 22 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார். பவர் பிளே ஓவர்களிலேயே சென்னை ரசிகர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். அதனை குறிப்பிடும் வகையில் 7ஆம் அறிவு படத்தில் வில்லன் டாங் லீயை பார்த்து மிரண்டு சூர்யா பேசும், "அவர் வந்து பார்த்தான் எல்லோரும் தானா துப்பாக்கியாலா சுட்டுக்கிட்டாங்க" என்று பேசி இருப்பார். அதை அப்படியே மாற்றி கைல் மேயர்ஸ்-க்கு பொருத்தி, "அவன் பாட்டுக்கு வந்தான், அடிச்சுட்டு போய்ட்டே இருக்கான்" என்று உருவாக்கப்பட்ட மீம் பயங்கரம்.
