CSK: ஆர்சிபி மீது சிஎஸ்கே அதிகாரப்பூர்வ புகார்.. காசி விஸ்வநாதன் ஆவேசம்.. டிஜே பாடலால் சர்ச்சை
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான மோதல் இப்போது கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டி பிசிசிஐ வரை சென்றுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியின் போது சிஎஸ்கே வீரர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட டிஜே குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் அரங்கில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். இந்த சீசனில் ஏப்ரல் 5-ம் தேதி பெங்களூருவில் நடந்த போட்டியின் போது, ஒரு விரும்பத்தகாத சம்பவம் அரங்கேறியுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங் செய்ய களம் இறங்கும் முன்பாக, அந்த மைதானத்தின் டிஜே "தோசை, இட்லி, சாம்பார், சட்னி" என்ற பாடலை ஒலிக்கச் செய்துள்ளார். இது தென்னிந்தியர்களைக் கிண்டல் செய்யும் விதமாகவும், வீரர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிஎஸ்கே வீரர்களைப் பற்றி அந்த டிஜே தரம் தாழ்ந்த கருத்துக்களைக் கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறுகையில், "டிஜே-வின் வேலை ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதுதான். சொந்த அணிக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதில் தவறில்லை, ஆனால் எதிரணி வீரர்களைக் கிண்டல் செய்வதும், அவர்களைப் பற்றித் தேவையில்லாத கருத்துக்களைக் கூறுவதும் ஏற்க முடியாதது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எங்கள் வீரர்களுக்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நாங்கள் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பாடலின் பின்னணியில் ஒரு பழைய சம்பவம் உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி வீரர் ஜித்தேஷ் சர்மா இந்தப் பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அதற்குப் பதிலடியாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஜித்தேஷ் ஆட்டமிழந்த போது இந்தப் பாடல் ஒலிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக தலையிட்ட சிஎஸ்கே நிர்வாகம், எதிரணி வீரர்களைக் காயப்படுத்தும் வகையில் எதையும் செய்யக்கூடாது என்று தனது டிஜே-வுக்குக் கடுமையான உத்தரவிட்டது. அதன் பிறகு சென்னையில் அத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லை.
தற்போது பெங்களூரு மைதானத்தில் நடந்த இந்தச் சம்பவம் எல்லையைத் தாண்டிவிட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது. இது குறித்து ஐபிஎல் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சிஎஸ்கே அணியிடம் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் கிடைத்துள்ளது. இது குறித்து விரிவான ஆய்வு செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் அரங்கில் மைதானங்களுக்கு இடையிலான இந்தப் போட்டி இப்போது பிசிசிஐ வரை சென்றுள்ளதால், சம்பந்தப்பட்ட டிஜே மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications