ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி அல்ல அது குடும்பம் என்று தான் கூறுவார்கள்.
மற்ற அணியில் சொதப்பிய வீரர்கள் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடுவதற்கு காரணமும் இங்கு கிடைக்கும் மரியாதை தான். இந்த நிலையில் நேற்று சாம்பியன் பட்டம் வென்ற பிறகு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் போல் சிஎஸ்கே அணியினர் செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திறமை இருந்தும் பெரிய அளவில் சர்வதேச அளவில் சாதிக்க முடியாமல் போன ராயுடு ஐபிஎல் வரலாற்றில் ஆறு கோப்பையை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.இந்த நிலையில் இறுதி போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்திருந்தார். நேற்று ஆட்டத்தில் கூட ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார்.
இதில் இரண்டு சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கத்திற்கு மாறியது. இதனை அடுத்து கோப்பையை வழங்கும் போது தோனி ஜடேஜாவையும் ராய்டுவையும் வந்து கோப்பையை வாங்க சொன்னார். இதனை அடுத்து இடது புறம் நிற்க ஜடேஜா வலது புறம் நிற்க நாயுடு நடுவில் கோப்பையை வாங்கினார்.
இதை அடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் மேடைக்கு வந்து உற்சாகமாக வெற்றியை கொண்டாடினார்கள். இதனை அடுத்து வழக்கம் போல் சிஎஸ்கே வின் இளம் வீரர்களிடம் கோப்பை சென்றது. பதிராணா, சிவம் துபே, ஷேக் ரசித், முகேஷ் சௌத்ரி போன்ற வீரர்கள் ஐபிஎல் கோப்பையில் வாங்கி கொண்டாடினர்.
அதன் பிறகு வீரர்கள் தங்களது குழந்தைகள் வரவழைத்து அவர்களிடம் கோப்பையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோனியின் மகள் ,ஜடேஜாவின் மகள், ரகானேவின் மகள், மோயின் அலி மகன் என அனைவரும் கோப்பையுடன் நின்று தங்களது தந்தைகளின் வெற்றியை கொண்டாடினார்கள். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. இது கிரிக்கெட் அணியா இல்லை விக்ரமன் சார் படத்தில் வரும் குடும்பமா என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.