சென்னை: ஐபிஎல் அரங்கை திரும்பிப் பார்க்க வைத்துள்ள சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா அணி பரிமாற்ற ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பேட்டிங் வரிசை முன் எப்போதும் இல்லாத வகையில் பலம் வாய்ந்ததாக மாறும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
சிஎஸ்கே வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு மாற உள்ளார். சஞ்சு சாம்சன் வந்தபின் சிஎஸ்கே-வின் முதல் ஐந்து வீரர்கள் கொண்ட பேட்டிங் படை, எந்தவொரு பந்துவீச்சையும் சிதறடிக்கும் திறன் கொண்டதாக அமையும். இந்த வீரர் பரிமாற்றம் நிகழ்ந்தால், சிஎஸ்கே-வின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களாக யார், யார் இருப்பார்கள்? இந்த பேட்டிங் வரிசையின் பலம் என்ன? என்பது குறித்த ஒரு விரிவான அலசல் இங்கே.

இளம் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே: மும்பையைச் சேர்ந்த இந்த இளம் வீரர், தனது அச்சமற்ற ஆட்ட அணுகுமுறைக்காக அறியப்படுபவர். பவர்-பிளே ஓவர்களில் களமிறங்கி, எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் வல்லவர். இவரது அதிரடியான தொடக்கம், அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்: அணியின் பேட்டிங் வரிசையின் அச்சாணியாக விளங்கும் கேப்டன் ருதுராஜ், நிதானமாக இன்னிங்ஸைக் கட்டமைப்பதிலும், தேவையான நேரத்தில் அதிரடிக்கு மாறுவதிலும் சிறந்து விளங்குகிறார். ஒரு முனையில் நிலைத்து நின்று, பார்ட்னர்ஷிப்களை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானது.
அதிரடி வீரர் சஞ்சு சாம்சன்: இந்த வரிசையின் மிக முக்கிய வீரராக சஞ்சு சாம்சன் கருதப்படுகிறார். மூன்றாம் நிலையில் களமிறங்கி, ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டையும் திறம்பட எதிர்கொள்ளும் சாம்சன், விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்வது அணிக்குக் கூடுதல் பலமாகும்.
மிடில் ஓவர் கிங் சிவம் துபே: சிஎஸ்கே அணியில் தனது அதிரடி ஆட்டத்தை மெருகேற்றியுள்ள சிவம் துபே, மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார். இவரது அசாத்தியமான சிக்ஸர் அடிக்கும் திறன், ரன் ரேட்டை மளமளவென உயர்த்தும்.
ஃபினிஷர் டிவால்ட் பிரேவிஸ்: 'பேபி ஏபி' என்று வர்ணிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் இளம் புயல் டிவால்ட் பிரேவிஸ், மைதானத்தின் எந்தப் பகுதிக்கும் பந்தை அனுப்பும் 360 டிகிரி ஆட்ட நுட்பம் கொண்டவர். இறுதிக் கட்ட ஓவர்களில் களமிறங்கி, ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் அபாரமான ஃபினிஷராக உருவெடுத்துள்ளார்.
ஒட்டுமொத்த கணிப்பு:
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த உத்தேச பேட்டிங் வரிசை, நிதானம், அதிரடி, அனுபவம் மற்றும் இளமை ஆகியவற்றின் சரியான கலவையாக அமைந்துள்ளது. இந்த வரிசையில் உள்ள ஐந்து வீரர்களுமே தனிநபராக ஆட்டத்தின் முடிவை மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள். இவர்களில் ஒருவர் ஒரு போட்டியில் 10 முதல் 15 ஓவர்கள் நின்று ரன் குவித்தால் சிஎஸ்கே அணி பெரிய ஸ்கோரை எட்டும்.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி முதல் ஐந்து வீரர்கள் கொண்ட சரியான பேட்டிங் வரிசையை அமைக்க முடியாமல் திணறியது. தற்போது சஞ்சு சாம்சன் வருகையாலும், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ் போன்ற வீரர்களை கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் கண்டதும் சிஎஸ்கே அணிக்கு பெரும் உதவியாக அமைய உள்ளது.
ரவீந்திர ஜடேஜாவின் ஆல்-ரவுண்ட் சேவையை சிஎஸ்கே அணி இழக்க நேரிட்டாலும், இந்த பலம் வாய்ந்த பேட்டிங் படை, எந்தவொரு பெரிய இலக்கையும் எட்டும் திறனுடன் அதை ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீரர் பரிமாற்றம் மட்டும் நிகழ்ந்தால், சிஎஸ்கே அணி சந்தேகத்திற்கு இடமின்றி கோப்பையை வெல்லும் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுக்கும்.