சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் Hall of Fame நிகழ்வை அன்று அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு விளையாட்டிலும், சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களுக்கு ஹால் ஆஃப் பேம் என்ற கவுரவம் வழங்கப்படும். பொதுவாக ஓய்வு பெற்ற ஜாம்பவான்களுக்கு தான் இந்த விருது வழங்கப்படும்.
அந்த வகையில், சுரேஷ் ரெய்னா மற்றும் மேத்யூ ஹேடனை கௌரவித்தது. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 'Roar'26’ ரசிகர் நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியானது.சிஎஸ்கே-வில் 2008 முதல் 2021 வரை நீடித்த சுரேஷ் ரெய்னா, 'சின்ன தல’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். நான்கு ஐபிஎல் (2010, 2011, 2018, 2021) மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 (2010, 2014) வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன்கள் (5529) குவித்தவர் ரெய்னா, இதில் 2 சதங்கள், 38 அரைசதங்கள் அடங்கும். 2014 சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 234 ரன்கள் அடித்து, 'தொடர் நாயகன்’ விருதையும் வென்றார். ரெய்னாவுக்கும், சிஎஸ்கேக்கும் கருத்து வேறுப்பாடு இருக்கிறது, இதனால் தான் அவர் ஓரங்கட்டப்பட்டார் என்று கருத்துக்கள் வெளியான நிலையில், இந்த கவுரவம் அவருக்கு கிடைத்தது.

இதே போன்று ஆஸ்திரேலியாவின் 54 வயது முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன், 2008 முதல் 2010 வரை சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார். 2010 ஐபிஎல் வென்ற அணியில் அவரும் அங்கம் வகித்தார். 2009 ஐபிஎல் சீசனில் 572 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் சிஎஸ்கே வீரர் என்ற பெருமையை அடைந்தார். ஹேடன் சிஎஸ்கே-விற்காக 1117 ரன்களும், 8 அரைசதங்களும் எடுத்தார்.இந்த மரியாதையை பெற்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், 5 முறை கோப்பையை வென்று தந்த தோனிக்கு ஏன் ஹால் ஆப் பேம் கவுரவம் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த விருது ஓய்வு பெற்ற வீரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். இதனால் தான் தோனிக்கு இந்த கவுரவம் இன்னும் கிடைக்கவில்லை. இதே போன்று ஐசிசி ஹால் ஆப் பேம் விருதும் 2025ஆம் ஆண்டு தான் தோனிக்கு வழங்கப்பட்டது. ஐசிசியை பொறுத்தவரை ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த விருது கிடைக்கும்.