சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 2025 ஐபிஎல் தொடரைப் போலவே இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் தோல்விகளுக்குப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தான் காரணம் என சிஎஸ்கே நிர்வாகம் அதிரடி முடிவு எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தோனி என மாற்றி மாற்றிச் செயல்பட்டும் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஏலத்தில் தேர்வு செய்த வீரர்கள் மற்றும் போட்டிகளில் அவர் செயல்படுத்திய வியூகங்கள் மீது பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியுடன் பயணிக்கும் பிளெமிங், தனது சொந்த நாட்டை சேர்ந்த நியூசிலாந்து வீரர்களைத் தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை என்ற நிலையில், இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து நியூசிலாந்து வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதிலிருந்தே பிளெமிங்கின் தன்னிச்சையான முடிவுகளுக்குச் சிஎஸ்கே நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டு இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். சஞ்சு சாம்சன் போன்ற அனுபவ வீரரை வாங்கினாலும், சரியான பந்துவீச்சாளர்களை ஏலத்தில் தேர்வு செய்வதில் சிஎஸ்கே அணி சொதப்பிவிட்டது. பேட்டிங்கில் காட்டிய கவனத்தைப் பந்துவீச்சில் காட்டாமல் விட்டதே தற்போதைய சறுக்கலுக்கு முக்கியக் காரணமாகும்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது 3வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. ஆர்சிபி அணியின் ரசிகர்கள் எப்போதுமே சிஎஸ்கே அணியைச் சீண்டுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். எனவே இந்தப் போட்டியில் வென்றால் மனதளவில் பெரிய உத்வேகம் கிடைக்கும்; கடந்த தோல்விகளை மறந்து சிஎஸ்கே வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.

ஒருவேளை இந்த ஆண்டும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், நிச்சயம் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் பதவி பறிபோக அதிக வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி பிளெமிங்கிற்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவே அமையும். இதில் தோற்றால் பிளெமிங்கின் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கும்..