சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவருக்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உள்ள 19 வயது இளம் வீரரை மாற்று வீரராகக் களமிறக்க வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார். தொடர் தோல்விகள் மற்றும் காயங்களால் துவண்டு போயிருக்கும் சிஎஸ்கே அணிக்கு, அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ள அந்த இரண்டு இளம் வீரர்களின் பெயர்கள் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் தவித்து வருகிறது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே விலகினார். அவருக்குப் பதிலாக வந்த ஸ்பென்சர் ஜான்சனும் காயத்தில் உள்ளார். தோனி முழங்கால் பிரச்சனை காரணமாக இதுவரை எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. டெவால்ட் பிரேவிஸ், கலீல் அகமது ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, பேட்டிங்கில் சிறப்பான பார்மில் இருந்த 19 வயதான ஆயுஷ் மாத்ரே காயத்தால் வெளியேறியது சிஎஸ்கே அணிக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. இதுவரை மாற்று வீரரை சிஎஸ்கே அறிவிக்கவில்லை.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியைச் சேர்ந்த விஹான் மல்ஹோத்ரா அல்லது அபிக்யான் குண்டு ஆகிய இருவரில் ஒருவரை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விஹான் மல்ஹோத்ரா இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஆயுஷ் மாத்ரே தலைமையிலான யு19 இந்திய அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்ட விஹான், அந்த உலகக்கோப்பையில் 60 சராசரியுடன் 240 ரன்கள் குவித்ததுடன், வங்கதேச அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
விஹான் மல்ஹோத்ராவை நடப்பு ஏலத்தில் பெங்களூரு அணி தனது அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால் பெங்களூரு அணியில் அவர் இன்னும் களமிறங்கவில்லை என்பதால், அவரை 'லோன்' முறையில் சிஎஸ்கே அணி தற்காலிகமாக வாங்கலாம் என அஸ்வின் அட்டகாசமான ஐடியா கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்து முதல் ஏழு போட்டிகள் வரை "லோன்" முறை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் பரிந்துரைத்த மற்றொரு வீரரான அபிக்யான் குண்டு மும்பையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஆவார். யு19 உலகக்கோப்பையில் 239 ரன்கள் குவித்து அசத்திய இவர், ஆசியக் கோப்பையில் மலேசிய அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி மிரட்டியவர். இவர் தற்போது எந்த ஐபிஎல் அணியிலும் ஒப்பந்தம் செய்யப்படாமல் உள்ளதால் சிஎஸ்கே நேரடியாகவே எடுக்கலாம். அஸ்வினின் இந்த சிறப்பான தேர்வுகளை சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
