ரூ.4000 ஆயிரம் கோடி சிஎஸ்கே பங்குகளை கேட்டாரா தோனி? வாய்ப்பே இல்ல என EX வீரர் கருத்து
சென்னை: சிஎஸ்கே அணியில் தோனி 25 சதவீத பங்குகளைக் கேட்டதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். எந்தவொரு ஐபிஎல் அணியும் ஒருவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வழங்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோனி முதலில் சிஎஸ்கே அணியில் 25 சதவீத பங்குகளை வாங்க விரும்பியதாகவும், பின்னர் தனது கோரிக்கையை 20 சதவீதமாகக் குறைத்துக் கொண்டதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது முன்னாள் கேப்டனுக்கு 5.5 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, தோனி 25 சதவீத பங்குகளைக் கேட்பது சாத்தியமில்லாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "சமீபத்தில் ஆர்சிபி அணி வாங்கப்பட்டபோது அதன் மதிப்பு 1.7 முதல் 1.8 பில்லியன் டாலராகப் பேசப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதே போன்ற மதிப்பைக் கொண்ட ஒரு அணிதான்.
அதன் மதிப்பை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கணக்கிடலாம், ஆனால் ஐந்து முறை கோப்பையை வென்ற இந்த அணிக்கு இந்தியாவுக்கு வெளியேயும் பல கிளை அணிகள் உள்ளன. அவர்களுக்கு என்று ஒரு பாரம்பரியமும் மதிப்பும் உள்ளது" என்றார்.
"சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது மிகப்பெரிய ஒரு பிராண்ட். அதன் மதிப்பு 1.8 பில்லியன் டாலராக இருக்கும்போது, அதில் 25 சதவீத பங்கை தோனி கேட்டுள்ளார் என்பது யதார்த்தமற்றது. இது சாத்தியமே இல்லை. யாரும் யாருக்கும் 400 மில்லியன் டாலர்களைக் கொடுத்துவிட மாட்டார்கள்" என்று அவர் மேலும் கூறினார். 25 சதவீத பங்குகளைப் பெற 400 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வது சாத்தியமில்லை என்றும் சோப்ரா தெளிவுபடுத்தினார். எனவே, இந்த செய்தி அர்த்தமற்றது என்றும், 25 சதவீதம் என்பது மிகவும் விசித்திரமான ஒரு எண்ணிக்கை என்றும் அவர் சாடினார்.
"முதலில் 3.5 சதவீதம், பின்னர் 5.5 சதவீதம் என்று பேசப்பட்டது. 5.5 சதவீத பங்குகள் என்று வைத்துக்கொண்டாலும் அது எவ்வளவு பெரிய தொகை என்று யோசித்துப் பாருங்கள். இரண்டு, மூன்று அல்லது ஐந்து சதவீதம் என்பது கூட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய தொகையாகும்" என்று அவர் விவரித்தார்.
"இது யாரோ திட்டமிட்டு பரப்பிய செய்தி என்றே நான் உணர்கிறேன். இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 25 சதவீதம் கேட்பது, பின்னர் அதை மறுப்பது, அதன் பிறகு 3.5 சதவீதம் தருவது, இறுதியில் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு 5.5 சதவீத பங்கிற்கு ஒப்புக்கொள்வது போன்ற செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று சோப்ரா தனது கருத்தை பதிவு செய்தார்.
தன்னிடம் உறுதியான தகவல் இல்லை என்பதால் இதை முற்றிலும் போலிச் செய்தி என்று கூற மாட்டேன் என்றும், ஆனால் இது உண்மை போலத் தெரியவில்லை என்றும் ஆகாஷ் சோப்ரா கூறினார். யாரோ தங்களின் சொந்த நலன்களுக்காக இந்த வதந்தியைப் பரப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications

