சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி அதுபற்றி பேசினார். அவர் சொன்ன வார்த்தைகள் அப்படியே அடுத்த சில நிமிடங்களில் செய்தியாக வெளியானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி சவுரவ் கங்குலி சரியாக இந்த விஷயத்தை முன்பே சொன்னார் என்று அனைவரும் வியப்பில் உள்ளனர்.
நேற்று மாலை கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் ஆட்டம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசும்போது, "சிஎஸ்கே அணியில் தோனி விளையாடினால் அவர் கேப்டனாகத்தான் விளையாட வேண்டும். அவர் கேப்டனாக இருந்தால் முற்றிலும் வேறு ஒரு ராட்சசன் போல விளையாடுவார்" என்று சொல்லியிருந்தார்.

அந்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுவதாகவும், தோனி கேப்டன் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுரவ் கங்குலி தோனி குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய முழு விவரம்: "எம்.எஸ். தோனி எப்போதும் சிக்ஸர்களை விளாசுபவர். நான் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அதை பார்த்தேன். அவருக்கு 43 வயதாகிறது. அவர் 2005-இல் நான் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. அது இயற்கை. ஆனால் இன்னமும் அவரிடம் சிக்ஸ் அடிக்கும் சக்தி இருக்கிறது."
"தோனியின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை குறித்து என்ன நினைக்கிறது என எனக்கு தெரியவில்லை. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடியதை நான் பார்த்தேன். சில சிக்ஸர்களை அடித்தார். அது அவரது அனுபவம்தான்."
"அவர் இதுவரை என்ன சாதித்தாரோ, இந்த விளையாட்டை எப்படி புரிந்து கொண்டிருக்கிறாரோ அதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு எது நல்லதோ அதை அவர் செய்கிறார். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் என்றால் அவர் நிச்சயமாக அந்த அணியின் கேப்டனாக விளையாட வேண்டும். அவர் கேப்டனாக இருந்தால் முற்றிலும் வேறு ஒரு ராட்சசன் போல இருப்பார்" என்று கூறினார் கங்குலி.