மும்பை: சிஎஸ்கே ரசிகர்கள் 'தல' தோனியை மைதானத்தில் பார்க்க ஏங்கிக்கொண்டிருக்க, அவர் ஏன் மைதானத்திற்கே வராமல் வேண்டும் என்றே அணியை விட்டு விலகி இருக்கிறார் என்பது பற்றி அதிரடித் தகவலை வெளியிட்டு இருக்கிறார் சைமன் டவுல். 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது, தோனி ஏன் இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்பது குறித்து நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் கூறியுள்ள கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி தற்போது தசைப்பிடிப்பு காயம் காரணமாகப் போட்டிகளில் விளையாடவில்லை என்று சொல்லப்பட்டாலும், அதன் பின்னணியில் ஒரு மாபெரும் தலைமை மாற்றம் ஒளிந்திருப்பதாகச் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தோனி மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறார். அவர் வேண்டும் என்றே மைதானத்திற்கு வருவதைத் தவிர்க்கிறார். அவர் மைதானத்தில் இருந்தால், கேமராக்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவர் பக்கமே கவனம் செலுத்துவார்கள். இது புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆதிக்கத்தைக் குறைத்துவிடும். 'எம்எஸ் எஃபெக்ட்' எனப்படும் தோனியின் நிழல் ருதுராஜ் மீது விழக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் தனது சொந்த பாணியில் முடிவுகளை எடுக்கவும், அணியைத் தன்னிச்சையாக வழிநடத்தவும் தோனி வழிவகை செய்கிறார். இதே கருத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானும் வழிமொழிந்துள்ளார். தோனி ஆடுகளத்திற்கு வெளியே அமர்ந்து ஆலோசனைகளை வழங்கினாலும், மைதானத்தில் ருதுராஜ் தான் உண்மையான பாஸ் என்பதை உலகிற்குத் தெரியப்படுத்தவே அவர் ஒதுங்கி இருக்கிறார். இந்த ஒரு திட்டமிட்ட மாற்றம்தான் சிஎஸ்கே அணியைச் சீராக வழிநடத்துகிறது.
இதே சூழலை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஒப்பிட்டுள்ள சைமன் டவுல், அங்கு நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குக் கிடைத்துள்ள சவால் மிகவும் பெரியது. அந்த அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் எனப் பல கேப்டன்கள் உள்ளனர். இது ஒரு 'சிங்கங்கள் நிறைந்த குகை' போன்றது. அங்கு ஹர்திக் பாண்டியா தனது அதிகாரத்தைச் செலுத்துவது கடினமாக உள்ளது. ஒரு காலத்தில் குட்டியாக இருந்த ஹர்திக், இப்போது சிங்கமாகத் திரும்பியிருப்பதை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் அங்குள்ள சிக்கல்" என்று அவர் விளக்கினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இந்தத் தலைமை மாற்றத்தை அவசரப்பட்டுச் செய்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னை அணியோ தோனியின் வழிகாட்டுதலில் மிகவும் நிதானமாகவும், திட்டமிட்டும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. தோனி மைதானத்திற்கு வராமல் இருப்பது ருதுராஜுக்குப் பொறுப்புகளைக் கற்றுக்கொடுக்க அவர் கையாளும் ஒரு ராஜதந்திர முறையாகவே பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, தோனி இல்லாத சிஎஸ்கே-வை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் தவித்தாலும், அணியின் எதிர்கால நலன் கருதி அவர் எடுத்துள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது.