சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், முதல் இரண்டு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது 'தொடர் நாயகன்' விருது வென்ற சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் 6 ரன்களிலும், சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவரது சராசரி தற்போது வெறும் 6.5 ஆக உள்ளது. இதனால் அவரது ஃபார்ம் குறித்துக் கேள்விகள் எழுந்த நிலையில், சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங், "சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார். இது டி20 கிரிக்கெட், அவர் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகிவிட்டார். ஆனால் அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாகவே உள்ளது, பயிற்சியிலும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். அவர் ஒருமுறை நிலைத்து நின்றுவிட்டால் ஆட்டத்தையே மாற்றிவிடுவார். இரண்டு இன்னிங்ஸை வைத்து ஒரு வீரரை எடை போட முடியாது. ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சனின் ஃபார்ம் ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஒரு காலத்தில் சேப்பாக்கம் மைதானத்தை தனது கோட்டையாக வைத்திருந்த சிஎஸ்கே, தற்போது அங்குத் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு சேப்பாக்கத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற சிஎஸ்கே, இந்த ஆண்டும் அதே சரிவைத் தொடர்ந்து வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த போதிலும், அதனைத் தற்காத்துக் கொள்ள சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி இலக்கை எட்டியது சென்னை ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தனது அடுத்த போட்டியில் ஞாயிறு அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ள சிஎஸ்கே, தனது பலவீனங்களைச் சரிசெய்து வெற்றிப் பாதைக்குத் திரும்புமா?