சென்னை: சின்ன தல ரெய்னா இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ள போட்டியில் சிஎஸ்கே அணி முதல்முறையாக களமிறங்க உள்ளது. அதேபோல் சிஎஸ்கே எதிர்கால கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது. சுமார் 1,426 நாட்களுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தில் தல தோனி தலைமையிலான மஞ்சள் படை களமிறங்க உள்ளது.

கடைசியாக 2019ஆம் ஆண்டில் தான் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சூழ விளையாடியது. அதே ஆண்டில் தான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணிக்காக தோனி எந்த ஃபேர்வெல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால் சென்னை சேப்பாக்கத்தில் தான் எனது கடைசியில் விளையாடுவேன் என்று தோனி அறிவித்திருந்தார். இதனால் தான் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் முதல்முறையாக ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. தோனி அறிவித்த அடுத்த நாளிலேயே ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். தோனியின் இணையற்ற தளபதியாக களத்தில் இருந்த ரெய்னா இந்தப் போட்டியில் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரெய்னா இல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே களமிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
சென்னை அணியின் சின்ன தல என்று அழைக்கப்பட்டு வந்த ரெய்னாவை கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. அதன்பின்னர் வர்ணனையாளராக ரெய்னா பணியாற்றி வருகின்றார். அதேபோல் எதிர்கால கேப்டன் என்று அழைக்கப்பட்டு வரும் ருதுராஜ் கெய்வாட்-ற்கு சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக களமிறங்க உள்ளார்.

டாப் ஆர்டரில் மூன்று ஆண்டுகளாக சென்னை அணியின் முகமாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், முதல்முறையாக சேப்பாக்கத்தில் களமிறங்குவதால் அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் நிதானமாகவும், பின்னர் அதிரடிக்கும் மாறும் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்ட முறை, சேப்பாக்கம் மைதானத்தில் எடுபடும் என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் சுழற்பந்துவீச்சை ஸ்டெப் அவுட் செய்து ஆடும் ஒரே இந்திய பேட்ஸ்மேனாக ருதுராஜ் இருப்பதால், சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாடை அதிகமாக நம்பி இருக்கிறது.