சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முக்கிய வீரருமான ருதுராஜ் கெய்க்வாட், அடுத்த சீசனில் அணியிலிருந்து நீக்கப்படலாம் என சில வதந்திகள் பரவி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தின. ஐபிஎல் 2025 சீசனில் ஏற்பட்ட காயம் மற்றும் அணியின் தொடர் சரிவுகள் இந்த வதந்திக்கு காரணமாக அமைந்தன.
ஆனால், இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எம்.எஸ். தோனியே நேரடியாகப் பேசியுள்ளார். ருதுராஜ் எங்கும் செல்லவில்லை, அவர் சிஎஸ்கேவின் முக்கிய அங்கம் என்பதை தோனியின் பேச்சு உறுதி செய்துள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ். தோனி, அணியின் பேட்டிங் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அவர் கூறுகையில், "எங்கள் பேட்டிங் வரிசை குறித்து எங்களுக்குச் சற்று கவலை இருந்தது உண்மைதான். ஆனால், இப்போது அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவே நினைக்கிறேன். ருதுராஜ் (கெய்க்வாட்) மீண்டும் அணிக்குத் திரும்புவார்," என்றார்.
கடந்த சீசனின் பாதியில் முழங்கை காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது வருகை, அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசைக்குத் தேவையான பலத்தையும், சமநிலையையும் கொடுக்கும் என்று தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தோனியின் இந்த பேச்சு, ருதுராஜ் கெய்க்வாட்டை சிஎஸ்கே அணி தக்கவைக்கும் என்பதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
அணியின் பலவீனங்கள் குறித்துப் பேசிய தோனி, "கடந்த சீசனில் நாங்கள் பின்தங்கினோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், சரி செய்யப்பட வேண்டிய சில ஓட்டைகள் இருந்தன. டிசம்பர் மாதம் ஒரு மினி ஏலம் வருகிறது. அந்த ஏலத்தில் அணியில் உள்ள சில குறைகளைச் சரிசெய்து, அந்த ஓட்டைகளை அடைக்க முயற்சிப்போம்," என்று கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை ஒப்புக்கொண்ட தோனி, "ஆமாம், கடந்த இரண்டு ஆண்டுகள் எங்களுக்குச் சிறப்பாக அமையவில்லை. நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. ஆனால், தோல்விகளில் இருந்து என்ன கற்றுக்கொண்டோம் என்பதுதான் முக்கியம். போன சீசனில் என்ன தவறு நடந்தது? என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்," என்று குறிப்பிட்டார்.
ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த அவர், "விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். சிஎஸ்கே அணி பெரும்பாலும் வெற்றிகளையே அதிகம் கண்டுள்ளது. எங்கள் செயல்முறைகள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம், அதே சமயம் முடிவுகளும் எங்களுக்குச் சாதகமாக வர வேண்டும். அடுத்த சீசனில் பெரும்பாலான பிரச்சினைகளை சரிசெய்து, எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்," என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.