CSK: ருதுராஜ் செய்யும் தவறு.. கேப்டன் என்ற எண்ணம்.. இதை மாற்றினால் தான் ரன் குவிக்க முடியும்!
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று அசத்தி இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் மந்தமான பேட்டிங் அணுகுமுறை குறித்து முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தொடக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ், பவர்பிளே ஓவர்களில் ரன் குவிக்கத் தவறுவது சிஎஸ்கே அணிக்கு அழுத்தத்தை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகியோர் ருதுராஜுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அவரது பேட்டிங் வரிசையை மாற்றுவது மற்றும் கேப்டன்சியால் ஏற்படும் சிக்கல் குறித்தும் அதிரடி ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.

ருதுராஜின் பேட்டிங் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய இர்பான் பதான், "ருதுராஜின் பேட்டிங் அணுகுமுறை நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. டெல்லிக்கு எதிரான போட்டியில் அவர் 17 பந்துகளைச் சந்தித்தபோதும், அதிரடியாக ஆட நினைக்கவில்லை. தனது விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே அவர் குறியாக இருந்தார்.
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இருப்பவர் ரிஸ்க் எடுத்து ஆட வேண்டும். இதே பாணியில் தான் விளையாடுவேன் என்றால் ருதுராஜ் 3-வது இடத்திற்கு இறங்குவது நல்லது. அவர் தொடக்க வீரராகவே நீடிக்க விரும்பினால், தனது ஆட்ட முறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கேப்டன்சி சுமையை குறையுங்கள் - சடகோபன் ரமேஷ்:
முன்னாள் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் கூறுகையில், "ருதுராஜின் மனதில் தற்போது பல விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, அவர் தன்னை ஒரு வீரராக மட்டுமே பார்க்க வேண்டும். கேப்டன் என்ற பொறுப்பை மனதில் சுமந்து கொண்டு பேட்டிங் செய்தால் ரன் குவிப்பது கடினம்.
அவர் தன்னைத் தானே ஒரு கேப்டனாகக் கேள்வி கேட்டுக்கொண்டு, சுதந்திரமாக ஆட முன்வர வேண்டும். சஞ்சு சாம்சன் ஒருபுறம் அதிரடி காட்டும் போது, ருதுராஜும் அவருடன் இணைந்தால் அது ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஜோடியாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.
புள்ளிவிவரம் என்ன சொல்கிறது?
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் குவித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் ருதுராஜ் ரன் எடுக்கத் தடுமாறி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் ருதுராஜ் ஏமாற்றம் அளித்தார். ஆனால் அவருக்குப் பின் வந்த இளம் வீரர் ஆயுஷ் மதுர 223 ஸ்டிரைக் ரேட்டில் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
2021-ல் ஆரஞ்சு தொப்பியை வென்ற ருதுராஜ், கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு தனது இயல்பான ஆட்டத்தை இழந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். வரும் போட்டிகளில் தனது பேட்டிங் வரிசையை அவர் மாற்றுவாரா அல்லது அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவாரா?


Click it and Unblock the Notifications