சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான நிலையில் தவித்து வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய திருப்பம் தேவைப்படுகிறது.
இந்த சூழலில், தற்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் சுவாரஸ்யமான கோரிக்கை ஒன்றை விடுத்தார். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெண்டராக பீட்டர்சனை நியமிக்க வேண்டும் என அணி நிர்வாகத்தை வலியுறுத்தி இருந்தார்.

இதனை கவனித்த பீட்டர்சன் அந்த ரசிகருக்கு வேடிக்கையாக பதிலளித்துள்ளார். அதில், "கண்டிப்பாக என்னை அழையுங்கள். சென்னை மாலத்தீவுக்கு மிக அருகில் உள்ளது. நான் அங்கிருந்து எளிதாக பயணம் செய்ய வசதியாக இருக்கும்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னை அணியின் மோசமான தொடக்கத்திற்கு சஞ்சு சாம்சனின் பேட்டிங் சறுக்கலும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ராஜஸ்தான் அணியில் இருந்து சென்னைக்கு வந்த அவர், முதல் 3 போட்டிகளில் முறையே 6, 7, 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார்.
அவரது பார்ம் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நீண்ட காலமாக வேறு ஒரு அணியில் விளையாடிய வீரர், புதிய அணியுடன் உடனடியாக ஒன்றிணைவது சற்று சவாலானது. சாம்சன் சென்னை அணியுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளார். அவர் ரன் குவித்து மூத்த வீரர்களுடன் இணைந்து அணிக்கு பங்களிக்க தீவிரமாக உள்ளார்.

இந்த சீசனில் அணியில் 5 அல்லது 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, வீரர்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது. சாம்சன் இந்த சூழலில் சிறப்பாக பொருந்தி உள்ளார். ஒரு பேட்டர் தனது பார்மை மீட்டெடுத்தால் எவ்வளவு ஆபத்தானவராக மாறுவார் என்பதை உலகக்கோப்பை தொடரில் பார்த்துள்ளோம். எனவே, சென்னை அணியில் அவர் தனது பயணத்தை சிறப்பாக தொடர நிர்வாகம் முழு ஆதரவையும், நம்பிக்கையையும் அளிக்கும் என தெரிவித்தார்.