சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, ஒருபுறம் கலீல் அகமதுவின் விலகல் பின்னடைவை ஏற்படுத்தினாலும், மறுபுறம் ஒரு பலமான மாற்று வீரரை நிர்வாகம் ரகசியமாகத் தயார் செய்துள்ளது. ஹைதராபாத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வீரர் தீவிரமாகப் பந்துவீசிக் கொண்டிருந்தார். அவர் யார் என்பது தெரிந்ததும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வலியால் பாதியிலேயே வெளியேறினார். அவருக்குத் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதால், அவர் குணமடைய 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த சீசனில் இருந்து அவர் முழுமையாக விலகியுள்ளார். பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தில் விக்கெட் எடுக்க கலீல் இல்லாதது சென்னை அணிக்கு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிடத்தை நிரப்ப, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் சென்னை அணியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2026 மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போனார். அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் 'நெட்' பவுலராகப் பணியாற்றி வந்தார். தற்போது அவர் சிஎஸ்கே வலைப்பயிற்சியில் மஞ்சள் நிற பயிற்சி ஜெர்சியுடன் பந்துவீசும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. வேறு சில வீரர்களையும் சிஎஸ்கே நிர்வாகம் சோதனை செய்து வருகிறது. ஆனாலும், ஆகாஷ் மத்வாலுக்கு தான் வாய்ப்பு அதிகம் என சிஎஸ்கே வட்டாரம் கூறுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிப் புகழ்பெற்றவர் ஆகாஷ் மத்வால். குறிப்பாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக வெறும் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளிய சாதனை இவருடையது. இது ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பந்துவீச்சாக கருதப்படுகிறது.
இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2023, 2024இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய இவர், 2025இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார். இந்த ஆண்டு ஏலத்தில் தேர்வாகாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பவுலராக செயல்பட்டு வந்தார்.

தற்போது ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் சென்னை அணி நிர்வாகம், ஆகாஷ் மத்வாலுக்குப் பல்வேறு தேர்வுகள் நடத்தி வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் சென்னை அணிக்கு, டெத் ஓவர்களில் துல்லியமாகப் பந்துவீசும் ஆகாஷ் மத்வாலின் வருகை மிகப்பெரிய பலமாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர். ஏற்கனவே மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை சிஎஸ்கே தட்டித்தூக்குவது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.