சிஎஸ்கே-வுக்கு பேரிடி.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்.. என்ன நடந்தது?
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று உற்சாகத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பெரும் பின்னடைவை தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அணியின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, கலீல் அகமதுவுக்கு இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குத் தசைநார் கிழிவு (Quadriceps Injury) இருப்பது உறுதியானது. இது 'கிரேடு 2' வகை காயம் என்பதால், அவர் இதிலிருந்து மீண்டு வரக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரிழப்பு ஏன்?
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் கலீல் அகமது இடம் பெற்றிருந்தார். 4.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், சிஎஸ்கே அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக இருந்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே புதிய பந்தில் சிஎஸ்கே அணிக்கு முக்கிய விக்கெட்டுகளைத் வீழ்த்திக் கொடுத்து வந்தார். தற்போது அவர் பாதியிலேயே விலகுவது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பலத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
பந்துவீச்சில் சிக்கல்
அணி இப்போதுதான் ஒரு சீரான நிலைக்குத் திரும்பி வருகிறது என கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மகிழ்ச்சி தெரிவித்திருந்த நிலையில், இந்தச் செய்தி அவருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய ருதுராஜ், "மெல்ல மெல்ல அணி ஒரு முழுமையான வடிவத்திற்குத் திரும்பி வருகிறது. ஒவ்வொரு வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்று கூறியிருந்தார்.
அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 192 ரன்கள் குவித்திருந்தது. ஆடுகளம் மெதுவாக மாறிய சூழலில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு கொல்கத்தாவை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பந்துவீச்சுப் படை வலுவடைந்து வருவதாகக் கருதப்பட்ட நிலையில், கலீல் அகமதுவின் விலகல் அணி நிர்வாகத்தைத் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ள நிலையில், இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அந்த அணிக்கு வாழ்வா-சாவா போராட்டமாக இருக்கும். இத்தகைய இக்கட்டான சூழலில், கலீல் அகமதுவுக்குப் பதிலாக மாற்று வீரராக யாரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு, இந்தச் செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications