மும்பை : இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நபர்கள் தற்போது முன்னாள் வீரர்கள் பங்கு பெறும் லெஜண்ட்ஸ் தொடரில் விளையாடி அதிரடி காட்டி வருகிறார்கள். மேலும் வெளிநாட்டில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட் லீக் ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார்கள்.
இந்த சூழலில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் நேஷனல் கிரிக்கெட் லீக் T10 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 10 ஓவர்கள் கொண்ட இந்த போட்டிகளில் ஏற்கனவே சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த சூழலில் மற்றொரு சிஎஸ்கே வீரரான ராபின் உத்தப்பா, இன்றைய ஆட்டத்தில் 27 பந்துகளில் 66 ரன்கள் குவித்து இருக்கிறார். டெக்ஸாஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் சிக்காகோ சார்பில் களமிறங்கிய ராபின் உத்தப்பா அதிரடியை காட்டினார். முதல் விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லீன் உடன் இணைந்த ராபின் உத்தப்பா டெக்ஸாஸ் பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார்.
உத்தப்பாவை அவுட்டாக்க முடியாமல் டெக்ஸாஸ் பவுலர்கள் தடுமாறினர். முன்னாள் பாகிஸ்தான் வீரர் வகாப் ரியாஸ் பந்துவீச்சை எல்லாம் உத்தப்பா ஒரு கை பார்த்தார். 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 66 ரன்கள் குவித்தார். இதில் ஏழு இமாலய சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதில் ராபின் உத்தப்பாவின் ஸ்ட்ரைக் ரேட் 244 என்ற அளவில் இருந்தது.
இதே போன்று கிறிஸ் லீன் மூன்று பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனால் ராபின் ஊத்தப்பா தலைமையிலான சிக்காகோ அணி 10 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெக்ஸாஸ் அணி 10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அண்மையில் இங்கிலாந்து அணியில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் மலான் 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார்.
ராபின் உத்தப்பா இன்னும் அதிரடியாக விளையாடி வருவதால் அவர் ஐபிஎல் தொடருக்கு மீண்டும் வரவேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவர் புதிய விதிப்படி அன்கேப்டு வீரராக தான் கருதப்படுவார்.
இதன் மூலம் ஏற்கனவே கையிருப்பு தொகை இல்லாமல் தவிக்கும் அணிகள் குறைந்த விலையில் உத்தப்பாவை மீண்டும் வாங்கிக் கொள்ள முடியும். இதனால் ரெய்னா உத்தப்பா போன்ற வீரர்கள் மீண்டும் சிஎஸ்கே அணிக்கே வந்துவிட்டால், சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.